மத்திய அரசு நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்பிற்கான இடங்களைப் பூர்த்தி செய்வதற்காக, நீட் எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது. இதற்கு நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், மருத்துவத்துறையின் மேம்பாட்டிற்காகவே இந்த தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதனால் அனைத்து மாநில அரசுகளும் இந்த தேர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியது. ஆனாலும், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், இந்த தேர்வினால் கிராமப்புற மற்றும் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தது.
இருப்பினும், பல்வேறு காரணங்களால் இந்த தேர்வு முறை தமிழ்நாட்டில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, அப்போதைய அதிமுக அரசு ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் இந்த தேர்வினால் பதிக்கப்பட்ட கூடாது என்பதற்காக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தது. இதனால் ஆண்டு தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில், இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு அப்போதைய எதிர்க்கட்சியான திமுகவின் அழுத்தத்தினால் கொண்டுவரப்பட்டது என தற்போதைய திமுக அமைச்சரான மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவினர் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று கூறி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, அதிமுக கொண்டு வந்த இந்த இட ஒதுக்கீட்டு முறையை திமுக உரிமை கொண்டாடுவதா? என்று பழனிசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் தவறான கருத்துக்கள் கூறப்படுவதாக பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த இட ஒதுக்கீட்டிற்காக திமுக போராடியது உண்மை தான் என்றால், அதற்கான ஆதாரங்களைக் காட்டச் சொல்லுங்கள் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமலேயே சட்டப்பிரிவு 162ன் மூலமாகச் சட்டத்தை அமல்படுத்தியது அதிமுக என்று அவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில், இவ்வளவு பேசும் திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ததா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Follow Us