7 MPs including Amali- Manickam Thakur suspended from Lok Sabha Photograph: (PARLIMENT)
மக்களவையில் ராகுல் காந்தியை பேச விடவில்லை எனக்கூறி காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் உள்ளிட்ட எம்பிக்கள் ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சீனா ஊடுருவல் விவகாரம் குறித்து மக்களவையில் நேற்று பேச முயன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு சபாநாயகர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றும் அது குறித்து பேச வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை வைத்தார். இதனால் மக்களவையில் அமளி ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் அவை ஒத்தி வைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இன்று அவையை நடத்தி வரும் விஷ்ணுபிரசாத் ''ராகுல் காந்தியை பேச அனுமதிக்கிறேன். ஆனால் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேச வேண்டும் வேறு விஷயங்களை குறித்துப் பேசக்கூடாது'' எனத் தெரிவித்தார்.
அப்பொழுது ராகுல்காந்தி மீண்டும் நேற்று தொடர்ந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு தயாரானார். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. பாஜகவின் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவை தலைவர் விஷ்ணுபிரசாத், நான்கு முறை மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தும் ராகுல் காந்தி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கின்ற தீர்மானத்தின் மீது பேசாமல் வேறு விஷயங்களை பேசுகிறார். எனவே வேறு சிலருக்கு பேசுவதற்கு வாய்ப்பளிக்கிறேன் என குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து பல கட்சிகளின் உறுப்பினர்களை பேசுவதற்கு அழைத்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த ஹரிஷை பேச ஆரம்பித்தார். அப்பொழுது காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். குறிப்பாக மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் அங்கிருந்த மேஜைகள் மீது ஏறி ஆவணங்களைக் கிழித்து அவை தலைவர் மீது எறிந்தனர். பின்னர் பாஜகவினர் புகார் தெரிவித்த நிலையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்ட அமளியில் ஈடுபட்ட ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Follow Us