தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவத்திற்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டில் திருப்பூர் பகுதியில் உள்ள சிலர் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக டில்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருப்பூருக்கு வருகை தந்த டெல்லி போலீசார் இது குறித்து பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகப் பதிவிட்ட சிலர் திருப்பூரில் உள்ள பல்லடம், ஊத்துக்குளி மற்றும் திருமுருகன்பூண்டி ஆகிய பகுதிகளில் பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீசார் பல்லடத்தில் 3 பேர், ஊத்துக்குளியில் 2 பேர் மற்றும் திருமுருகன்பூண்டியில் ஒருவர் என மொத்தம் ஆறு பேரைக் கைது செய்தனர்.
இவர்கள் 6 பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் போலி ஆவணங்கள் மூலமாக இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடம் இது குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Follow Us