54,000 crores fraud through digital crimes; Judges express anguish Photograph: (supreme court)
தற்காலத்தில் டிஜிட்டல் முறையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அதில் பண மோசடி என்பது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த குற்றச் சம்பவத்தில், மோசடி பேர்வழிகள் அப்பாவி பொதுமக்கள் உட்படப் பலரையும் டிஜிட்டல் கைது செய்து. அவர்களிடம் இருந்து அவர்களின் வங்கிக்கணக்கு விவரங்களைப் பெற்றுக்கொண்டு, லட்சக்கணக்கில் பணம் பறிக்கின்றனர். இவ்வாறு, மோசடியில் ஈடுபடுபவர்கள் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் சிபிஐ அதிகாரிகள் போல தங்களைக் காட்டிக் கொண்டு வீடியோ கால் அல்லது ஆடியோ கால் மூலமாகப் பொதுமக்களை மிரட்டுகின்றனர். அதோடு, அவர்களை "டிஜிட்டல் கைது" செய்வதாகக் கூறி, அச்சுறுத்தி வங்கிக் கணக்குகளின் மூலமாகப் பணத்தைப் பறிக்கின்றனர்.
இந்த நிலையில், இணையக் குற்றங்கள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மால்யா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, " டிஜிட்டல் குற்றங்கள் மூலமாக ரூ.54000 மோசடி செய்யப்பட்டிருப்பதை மாபெரும் திருட்டு அல்லது கொள்ளை என்று தான் கருத வேண்டும். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட இந்த தொகையானது, சில சிறிய மாநிலங்களின் பட்ஜெட்டை விட அதிகம். சில வங்கி அதிகாரிகளின் கூட்டுச் சதி மற்றும் அலட்சியம் போன்ற காரணங்களால் இது போன்ற குற்றங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, ரிசர்வ் வங்கி உட்படப் பிற வங்கிகளும் இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்" என வலியுறுத்தினர்.
மேலும், "டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகளை சிபிஐ விரைந்து விசாரிக்க வேண்டும். டிஜிட்டல் கைது சம்பந்தமான வழக்குகள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க குஜராத் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்கள் சிபிஐ க்கு அனுமதி வழங்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர். அதோடு, டிஜிட்டல் கைது வழக்குகளில் இழப்பீடு வழங்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க ரிசர்வ் வங்கி, தொலைத்தொடர்புத்துறை மற்றும் பிற நிறுவனங்கள் கலந்தாலோசிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இந்த வழக்கு சம்பந்தமான புதிய நிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Follow Us