கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம்போல் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென மதிய உணவில் பல்லி விழுந்ததாகக் கூறப்படுகிறது. பல்லி விழுந்த மதிய உணவைச் சாப்பிட்ட 54 குழந்தைகளுக்கு திடீரென மயக்கமடைந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக குழந்தைகளை வேன் மூலம் மீட்டு வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்களுடைய குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என அச்சத்தில் பள்ளியைப் பெற்றோர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சுத்தமாகவும், தரமானதாக வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து மீதமுள்ள மாணவர்களை பரிசோதனைக்காக அரசு பேருந்து மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் சமையலர் ஒருவர் மட்டுமே உள்ளதால் சுகாதாரமற்ற இடத்தில் உணவு வழங்கப்பட்டதாகவும். அந்த உணவில் பல்லி விழுந்ததாகவும் பெற்றோர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். உடனடியாக இந்த பள்ளியில் கூடுதல் சமையலறை நியமித்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.