கோவை விமான நிலையத்தின் பின்புறம், கடந்த 2-ம் தேதி இரவு 10.30 மணியளவில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், தலைமறைவாக இருந்த 3 பேரையும் சுட்டுப் பிடித்துள்ளனர்.

Advertisment

அவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணன்-தம்பிகளான கருப்பசாமி, சதீஷ், கார்த்திக், காளீஸ்வரன் மற்றும் அவர்களின் உறவினர் குணா என்ற தவசி ஆகியோர் எனத் தெரியவந்தது. காயமடைந்த குற்றவாளிகள் மூவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதே நவம்பர் 2-ஆம் தேதி காலை ஆட்டு வியாபாரி தேவராஜ் என்பவரையும் இந்தக் கும்பல் கொலை செய்த அதிர்ச்சித் தகவல் வெளியானது. பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட இரண்டு கோரமான குற்றங்களும் ஒரே நாளில் நடந்ததாக வெளியாகியுள்ள தகவல் போலீசார் விசாரணையை மேலும் ஆழமாக்கியுள்ளது.

Advertisment

இந்த நிலையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 50 பக்க குற்றப்பத்திரிகையை கோவை மகளிர் கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிந்து முன்னிலையில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். அத்துடன் 400 பக்க ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் 13 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் முதல் குற்றவாளியாக கருப்பசாமியும், இரண்டாவது குற்றவாளியாக அவரது தம்பி கார்த்திக்கும், மூன்றாவது குற்றவாளியாக தவசியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் குற்றச் சம்பவங்களின் விவரம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றச்செயல், தடயங்கள், வாக்குமூலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment