பாகிஸ்தானில் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தினத்தில் இஸ்லாமியர்கள் மசூதிக்குச் சென்று தொழுகையில் ஈடுபடுவது வழக்கம் அந்த வகையில், பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தின் ஷெஹ்சாத் டவுன் பகுதியில் உள்ள ஷியா என்ற பிரிவினருக்கு சொந்தமான ஒரு மசூதியில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த மசூதி அருகே திடீரென பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் சம்பவத்திலேயே 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியது தற்கொலைப் படை என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் ஷியா மற்றும் சன்னி என்ற இரு பிரிவினர் அவ்வப்போது மோதிக்கொள்ளும் சம்பவம் என்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் ஷியா பிரிவு இஸ்லாமியர்களுடைய மசூதி அருகே தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வெடி விபத்து சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகும் வாய்ப்பு உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனிடையே, இந்த வெடி விபத்தினுடைய பாதிப்பு கடுமையாக உள்ளதால், அந்த பகுதிகளில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் அழைத்துச் செல்லும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/06/pakist-2026-02-06-17-12-02.jpg)