தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் வனப்பகுதி அமைந்துள்ளது. இதன் காரணமாக மலைப்பகுதியில் வசிக்கும் வன விலங்குள் அவ்வப்போது பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு வருவதை வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் புளியங்குடி பகுதியில் இன்று (07.08.2025) அதிகாலையில் அம்பிகாபதி, ராமலட்சுமி, சிவமாலை ஆகிய 3 பேரும் விவசாய நிலத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த கரடி ஒன்று 3 பெண்களையும் தாக்கியுள்ளது.
இதனையடுத்து 3 பேரும் அங்குள்ள உறவினர்களுக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 3 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் சிவமாலை என்பவருக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் கரடி கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரடி கடித்ததில் 3 பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் தென்காசி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில், “புளியங்குடி பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது குறித்து வனத்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளோம். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே இனியாவது இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.