சென்னை துறைமுகத்திலிருந்து எரிபொருள் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு ரயில் பற்றி எரிந்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை துறைமுகத்திலிருந்து எரிபொருள் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் வந்த பொழுது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீயானது பல்வேறு பெட்டிகளுக்கு பரவியது. முன்னதாக உள்ளே இருக்கும் எரிபொருள் டீசலா அல்லது எண்ணெய்யா என்பது தெரியாத நிலையில் தற்போது சரக்கு ரயிலில் இருந்தது கச்சா எண்ணெய் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு வேகன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் தீப்பற்றி எரிந்து வருவதாக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

ஒரு பெட்டியில் தீப்பிடித்த நிலையில் தற்போது தீயானது எட்டு பெட்டிகளுக்கு பரவியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வானுயர கரும்புகை சூழ்ந்துள்ளதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக திருவள்ளூரில் இருந்து சென்னை, அரக்கோணம் மார்க்கத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இந்த விபத்து காரணமாக திருவள்ளூரில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய எட்டு ரயில் சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஐந்து ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisment

இந்த விபத்து தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதேபோல் 85 சதவீதம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதிகப்படியான தீ காரணமாக மின்சார கேபிள்கள் உருகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தண்டவாளங்கள் சேதம் அடைந்துள்ளது. 76 ஆயிரத்து 500 லிட்டர் அளவிற்கு தண்ணீர் மற்றும் போம் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீயணைப்பு பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட இடத்தில் 13 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று பெட்டிகள் தற்பொழுது எரிந்து வருகின்றன. பத்து ஆயில் டேங்கர்கள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்துள்ளது. 39 பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளது. ஒரு ஆயில் டேங்கரில் 27 ஆயிரம் லிட்டர் டீசல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. விபத்து ஏற்பட்ட பகுதியில் 15 தீயணைப்பு வாகனங்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதேநேரம் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.