தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின் புதூர் பகுதியில் உள்ள கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (வயது 29). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி புகுந்து, அந்த வீட்டிலிருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த சிறுமிக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, நாலாட்டின் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Advertisment

இந்த புகாரின் அடிப்படையில், போக்ஸோ சட்டத்தின் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்பு, இந்த வழக்கு சம்பந்தமான இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் காவல்துறையினர் சமர்ப்பித்தனர். இந்த வழக்கினை விசாரணை செய்த தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம், வெற்றிச்செல்வன் குற்றவாளி என்பதை உறுதி செய்தது.  இதையடுத்து,குற்றவாளிக்குக் குற்றத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி, அத்துமீறி வீடு புகுந்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2,500 அபராதமும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறையும், ரூ.10000 அபராதமும், கொலை மிரட்டல் விடுத்தற்காக 2 ஆண்டுகள் சிறையும், ரூ.2500 அபராதமும் விதிக்கப்பட்டது. 

Advertisment

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தர உறுதுணையாய் இருந்த டிஎஸ்பி ஜெகநாதன், காவல் ஆய்வாளர் சுகதேவி, தலைமைக்காவலர் சுதா மற்றும் அரசு வழக்கறிஞர் ஜானகி ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் மதன் பாராட்டினார்.