+2 students bid farewell with a hearty farewell after eating a delicious meal! Photograph: (govt school)
தமிழ்நாட்டில் +2 தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டுகளை வழங்கி தேர்வுகளை நன்றாக எழுத அறிவுரைகள் கூறி அனுப்புகின்றனர் ஆசிரியர்கள். சில இடங்களில் மாணவர் பிரிந்து செல்வதை மன வேதனையோடு பிரியத் தொடங்கி உள்ளனர்.
அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி +2 மாணவர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக பள்ளி இறுதி நாளான நேற்று மதியம் பள்ளியில் சமைக்கப்பட்ட மதிய உணவை ஒரு பெரிய தட்டில் வாங்கி மொத்தமாக கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டனர். இந்த சம்பவம் சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் நெகிழச் செய்தது. மாணவர்களிடையே பாகுபாடின்றி அவர்களின் அன்பை வெளிப்படுத்தும் நிகழ்வாக பார்ப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அதேபோல, வழக்கம் போல ஒவ்வொரு ஆண்டும் நடப்பது போல் பள்ளி வளாகத்தில் உள்ள அய்யனார் கோயிலில், கோயில் நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி, ஆசிரியர்கள் இணைந்து அனைத்து மாணவர்களுக்காவும் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகளும் செய்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கி மகிழ்ந்தனர். தொடர்ந்து பள்ளியில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நுழைவுச் சீட்டுகள் வழங்கிய நிலையில் கண்கலங்கி விடைபெற்றுச் சென்றனர்.
அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் கூறும் போது, ஒவ்வொரு ஆண்டும் நம் பள்ளி சிறப்பான தேர்ச்சி பெறுவது போல இந்த ஆண்டும் தேர்ச்சி பெற்று உயர் கல்விக்கு செல்ல வேண்டும். மேலும் தேர்வு எழுதும் போது பதற்றம் இல்லாமல் எழுத வேண்டும், முதலில் கேள்விகளை நன்றாக படித்துப் புரிந்து கொண்டு அதற்கான விடைகளை எழுத வேண்டும் என்று அறிவுரையும் கூறினார்.
Follow Us