17-year-old boy rescued from bondage in kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் ஏரிக்கோடி அருகே காட்டுக்கொட்டாய் பகுதியில் லட்சுமணன் என்பவர், சிறுவன் ஒருவனை ஐந்தாண்டுகளுக்கு மேலாக கொத்தடிமையாக வைத்து விவசாய வேலைகளை வாங்குவதாகவும், தன்னிடம் உள்ள ஆடு மாடுகளை காட்டுக்கு சென்று மேய்ப்பதற்கும் அந்த சிறுவனை வைத்திருப்பதாகவும், அந்த பையனுக்கு சரியாக உணவுகூட தருவதில்லை, வீட்டுக்கு அனுப்புவதில்லை என கடந்த 2025 மே மாதம் சின்னசேலம் வட்டாட்சியருக்கு புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை விசாரித்த அப்போதைய தாசில்தார் பாலகுரு மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள்கள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மூடி மறைத்து விட்டதாகவும் இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தற்போது உள்ள கோட்டாட்சியரிடம் அன்பழகன் மனு அளித்துள்ளார். இதை விசாரித்த கோட்டாட்சியர் முருகன் நேரில் சென்று காட்டின் உரிமையாளரிடம் விசாரணை செய்த போது, புகார் உண்மை என தெரியவந்தது. வேலை செய்யும் அந்த சிறுவனுக்கு 17 வயதுதான் ஆகிறது என உறுதியானது, மருத்துவ பரிசோதனைக்காக அவரை அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் நிலத்தின் உரிமையாளர் வெளி மாநிலத்திற்கு தப்பிவிட்டார், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு ஆஜராகமாறு கோட்டாட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். கோட்டாட்சியர் முதற்கட்ட விசாரணையில் சிறுவனின் பாட்டி இரண்டு லட்சம் பணம் வாங்கிக் கொண்டு கொத்தடிமையாக இங்கே விட்டுச் சென்றது என தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வருவாய்த் துறையினர் போலீசார் இருந்தனர். விவசாய பணி மற்றும் ஆடு மேய்ப்பருக்கு சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுவனை கொத்தடிமையாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us