முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் மூட்டை மூட்டையாக ஆவணங்கள் கைப்பற்றப்படுள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்யா பன்னீர்செல்வம். சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குபதிவு செய்திருந்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் ஏற்கனவே ஒருமுறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி இருந்தனர்.
சத்யா பன்னீர்செல்வத்தின் கணவர் பன்னீர்செல்வம் நகர்மன்ற தலைவராக இருந்தபோது பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை தேர்வு செய்து அதை ஏலம் விட்டதில் 20 லட்சம் ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டனர்.
பண்ருட்டி நகர்ப் பகுதியில் உள்ள சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் 17 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மூட்டை மூட்டையாக ஆவணங்கள் எடுத்துச் சென்றனர். வெளியே இருந்த சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையின் பொழுது திடீரென சத்யா பன்னீர்செல்வத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.