புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள புதுப்பட்டி முனிக்கோயில் அருகே செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தில் கூடுகட்டி இருந்த கதண்டுகள் திங்கள் கிழமை மாலை ளெியேறி பறந்துள்ளது. அந்த நேரத்தில் அந்த பழியாகச் சென்ற 9 பேரைக் கதண்டுகள் விரட்டி விரட்டி கடித்துள்ளது.
இவர்கள் அனைவரும் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அதில் 2 பேரை மேல் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதே போல மாலை நேரத்தில் பள்ளி முடிந்து அந்த வழியாகச் சென்ற 7 மாணவ, மாணவிகளையும் கதண்டுகள் கடித்துள்ளது. இதில் காயமடைந்த மாணவ, மாணவிகளையும் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஒரு மாணவரைப் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கதண்டு கூட்டை அகற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கறம்பக்குடி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.