வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் பயன்படுத்துவதாக குடியாத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் குடியாத்தம் போலீசார் நெல்லூர் பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் பயன்படுத்திய ஐயப்பன் (வயது 27) மோகன் (வயது 23) தேவன் (வயது 25) நவீன் குமார் (வயது 20) உள்ளிட்ட 4 பேர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

Advertisment

இதில் அவர்கள் 4 பேரும் ஆந்திர மாநிலம் வீக்கோட்டா பகுதியில் உள்ள மெடிக்கல் மற்றும் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் இவர்களிடம் போதை மாத்திரைகள் வாங்கி உபயோகப்படுத்திய வல்லரசு, தாமு, கிரிதரன், சுரேஷ்குமார், விக்னேஷ், வெங்கடேசன், ஹேமகுமார், சுகேல் பாஷா, அரிகிருஷ்ணன், பாஸ்கர், ராதாகிருஷ்ணரெட்டி உள்ளிட்ட 15 பேர் கைது செய்தனர். 

அதோடு அவர்களிடம் இருந்த 400 மாத்திரைகள் 5 ஊசிகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர் மேலும் இவர்களிடம் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் வாங்கி உபயோகப்படுத்தி தப்பி ஓடிய 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் போதை ஊசி மற்றும் போதை மாத்திரை உபயோகப்படுத்தி வந்ததாக 15 பேர் கைது 11 பேர் தப்பி ஓடிய சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.