கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில் நகரமான தர்மஸ்தலாவில், 800 ஆண்டுகள் பழமையான புனிதத் தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற மஞ்சுநாதர் கோயில் உள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பக்தர்கள் வரை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். தலைமுறை தலைமுறையாக ஜெயின் ஹெக்டே குடும்பத்தினரால் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது, மாநிலங்களவை உறுப்பினரான வீரேந்திர ஹெக்டே கோயிலின் நிர்வாகியாக உள்ளார்.
சிவபக்தர்களுக்கு அமைதியை அளிக்கும் தர்மஸ்தலா, தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தர்மஸ்தலாவில் 100க்கும் மேற்பட்ட சிறுமிகள், பள்ளி மாணவிகள், மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாக, கோயிலில் பணியாற்றிய முன்னாள் துப்புரவு ஊழியர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 4ஆம் தேதி தர்மஸ்தலா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து அவர் சுட்டிக் காட்டிய 13 இடங்களில் உடலைத் தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இதுவரை 11 இடங்களில் இந்த பணிகள் நடைபெற்றன. அந்த வகையில் அவர் 6ஆவதாக சுட்டிக்காட்டிய இடத்தில் ஏற்கனவே எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.இந்நிலையில் நேற்று (04.08.2025) 11ஆவதாக சுட்டிக்காட்டிய ய இடத்தில் ஆய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அங்கு சுமார் 100 எலும்புகள், ஒரு மண்டையோடு முதுகுத் தண்டு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அங்கு இது ஒருவரின் எலும்புகளா? அல்லது பலரின் எலும்புகளா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.