புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் அறந்தாங்கி. தினந்தோறும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்வதால், அறந்தாங்கியை வணிகம் செய்ய சரியான இடமாக தொழில் செய்வோர் பார்க்கின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக அங்கு நடக்கும் திருட்டு சம்பவங்கள், அறந்தாங்கிக்கு ஏன் தொழில் செய்ய வந்தோம்..? என்று நினைக்கும் அளவிற்கு வணிகர்களை வேதனைப்படுத்தியுள்ளது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. பைக் திருட்டு தொடங்கி வீடு, கோவில், கடைகள் என திருடர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, திருட்டைத் தடுக்க, கடைகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துங்கள் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஒருவேளை திருட்டு சம்பவம் நடந்தால், சிசிடிவி உதவியுடன் குற்றவாளியைப் பிடிக்கலாம் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, பெரும்பாலான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் வாங்கி பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், அதற்குப் பிறகும் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நிகழ்வதாக வணிகர்களும், கடை உரிமையாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், திருட்டு சம்பவம் நடந்தவுடன் புகார் வாங்கிக்கொண்டு விசாரணைக்கு வரும் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளைப் பெற்றுக்கொண்டு செல்வதோடு சரி, இதுவரை எந்தத் திருடனையும் பிடிக்கவில்லை என்று வணிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நகரின் மையப்பகுதியில், தாலுகா அலுவலகம் அருகே உள்ள பிரதான சாலையில், கதிரேசன் என்பவர் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் பெண்களுக்கான தையல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம் போல், கடந்த 15ஆம் தேதி காலை கதிரேசன் கடையைத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி காவல்துறையினர், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், அதிகாலை 4:12 மணிக்கு ஷட்டரில் பூட்டப்பட்டிருந்த பூட்டுகளை உடைத்துக்கொண்டு, டிராவல் பேக்குடன், டிப் டாப் உடை, காலில் ஷூ, கையில் மருத்துவ கையுறை அணிந்த மர்ம நபர்கள் உள்ளே நுழைவது பதிவாகியிருந்தது. பின்னர், உள்ளே இருந்த மேஜையின் பூட்டை, தாங்கள் கொண்டு வந்த பையில் இருந்த திருப்புளி உள்ளிட்ட கருவிகள் மூலம் திறந்து, அதில் இருந்த 1.65 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு, பின்னர் வந்த வழியே சென்றுள்ளனர். அந்த மர்ம நபர்கள் சுமார் 9 நிமிடங்களில் கடைக்குள் புகுந்து, விரைவாக வேலையை முடித்துவிட்டு, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதேபோல், அருகே இருந்த மருந்தகக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்களுக்கு அங்கு பணம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், கதிரேசன் கடையில் நடந்த திருட்டுக்கு பயன்படுத்திய மருத்துவ கையுறை அங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இரு சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அறந்தாங்கி வர்த்தக சங்கத் தலைவர் தங்கதுரை கூறும்போது, “அறந்தாங்கி நகரில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை ரோட்டில் மூன்று கடைகளை உடைத்து 1.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டது. உடனே அறந்தாங்கி காவல் நிலையத்தில் சிசிடிவி பதிவுகளுடன் புகார் அளித்தோம். ஆனால், எந்தப் பலனும் இல்லை. அடுத்து, இதே நகரில் பகலில் மூன்று கடைகளில் பூட்டு உடைத்து சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் திருட்டு நடந்தது. அப்போதும் சிசிடிவி பதிவுகளுடன் புகார் அளித்தோம். ஆனால், இதுவரை ஒரு திருடனையும் பிடிக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு அக்னி பஜாரில் இரண்டு கடைகளில் 15,000 ரூபாய் வரை திருடப்பட்டது.
அதைத்தொடர்ந்து 15 ஆம் தேதி அதிகாலை, நகரின் மையப்பகுதியில் இரண்டு கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு, ஒரு கடையில் 1.65 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. இதற்கும் சிசிடிவி பதிவு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரையும் பிடிக்கவில்லை. காவல்துறையினர் தொடர்ந்து மெத்தனமாக இருப்பதால், திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இதனால், வியாபாரிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளோம். தீபாவளி வியாபாரம் செய்ய வேண்டிய நேரத்தில், திருட்டு பயத்தால் மிகவும் அச்சத்தில் இருக்கிறோம்” என்றார்.
திருட்டை தடுக்க, திருடனைப் பிடிக்க கேமரா வைக்க சொன்ன காவல்துறையால், கேமராவில் பதிவான நபர்களை பிடிக்க முடியாமல் திணறுவது பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகளை ஏழுப்பியிருக்கிறது.