கமல் திருவிழா: இந்திய நட்சத்திரங்கள் வாழ்த்து
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவில் ரஜினிகாந்த், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், மற்றும் தமிழ் நடிகர்-நடிகைகளும் வாழ்த்தினார்கள்.
விழாவில் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.விஸ்வநாத், நடிகர்கள் சிவகுமார், பிரபு, ஜெயராம், மாதவன், அர்ஜுன், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விவேக், நடிகைகள் ஜெயசித்ரா, ராதிகா, கவுதமி, ஊர்வசி, ரோகிணி, மீனா, ரேவதி, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோரும் பேசினார்கள்.
பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிகரன், கமலஹாசன் மகள் சுருதி ஆகியோர் மேடையில் கமல் படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாடினார்கள்.
விழாவில் நடிகர் பிரபுதேவா, நடிகை ஷோபனா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் நடந்தது. விழா நடந்த அரங்குக்குள் நடிகர் கமலஹாசனுடன் நடிகர் ரஜினியும் கைகோர்த்தபடி வந்தபோது அரங்கில் கூடியிருந்த ரசிகர்கள் அத்தனை பேரும் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள். விழாவுக்கு இந்திய திரையுலகமே திரண்டு வந்திருந்தது.
விழாவில் நடிகை சரோஜாதேவி கலந்து கொண்டு கமலஹாசனை வாழ்த்தி பேசினார்.
’’அழகான என் மகன் கமல். அவர் என் நல்ல நண்பரும் கூட. அதோடு மிடுக்கான தோற்றம் கொண்ட ஹீரோ. அவர் நடிப்பில் எனக்கு பிடித்த படம் குணா. நாங்களெல்லாம் மேக்கப் போட்டுக்கொண்டு முகத்தை அழகாக்கிக் கொள்வோம். ஆனால் அழகான இந்த கமல் மேக்கப் போட்டு இருக்கிற அழகையும் கெடுத்துக் கொண்டு நடித்த படம் குணா. இந்தப் படத்தையடுத்து அவர் தன் தோற்றத்தையே மாற்றிக்கொண்டு அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்த அப்பு கேரக்டரும் ரொம்ப பிடிக்கும்.
பார்த்தால் பசி தீரும் படத்தில் சிறுவனாக நான் பார்த்த கமல் இப்போது தன் நடிப்பால் எங்கேயோ போய் விட்டார். ஆனாலும் அன்று நான் பார்த்த அந்த குணம் மாறவில்லை. இப்போது இத்தனை புகழுக்குப் பிறகும் அதே குணத்துடன் தான் இருக்கிறார். அவருக்கு நடிப்பு புதுசில்லை. அது அவர் உடம்போடும் மனசோடும் கலந்தே இருக்கிறது.
கமல் சிறுவனாக இருந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரின் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நடிகர்திலகத்துடன் நடித்தபோது அவருக்கு நடிப்பு வந்தது. என்அன்பு தெய்வம் எம்.ஜி.ஆருடன் நடித்தபோது அவர் மாதிரியே நல்லா பழகுகிற குணம் வந்தது.
அவர் எப்போதும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஒரு தாய் ஸ்தானத்தில் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். வேண்டிய சவுகரியங்கள் செய்து கொடுத்து வீட்டில் உள்ளவர்கள் அவரை நல்லா பார்த்துக்கணும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’என்று பேசினார்.
விழாவில் டைரக்டர் கே.பாலச்சந்தர் பேசும்போது, ’’கமலுக்கு நடிப்பில் நான் தான் குரு என்று சொல்கிறார்கள். நானென்றில்லை, ஒரு குப்பன், சுப்பன் டைரக்டர் என்றாலும் கமல் இந்த அளவுக்கு நிச்சயம் வந்திருப்பார். `அரங்கேற்றம்' படத்தில் அவரை நடிக்க வைத்தபோது நான் சொல்லிக் கொடுத்ததையும் தாண்டி புது விஷயங்களை நடிப்பில் சேர்த்துக் கொண்டு என்னை பிரமிக்க வைத்தவர் அவர். அப்போதே இந்த ஆளிடம் சரக்கு இருக்கிறது. இது மிகப்பெரிய விலைக்கு போக இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். அவர் மேலும் பல உயரங்களை சந்திக்கப் போகிறார் என்பது நிச்சயம்'' என்று குறிப்பிட்டார்.நடிகர் மம்முட்டி பேசும்போது, கமல் மலையாளத்தில்தான் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளதை நினைக்கும்போது எனக்கு பெருமையாக உள்ளது. அவர் 50 வருட கலை சேவகர், அவருக்கும் எனக்கும் இப்போது போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அவரும் 3 தேசிய விருது வாங்கியுள்ளார். நானும் வாங்கியுள்ளேன். அடுத்த விருது யார் வாங்கப்போகிறார்கள் என எங்களுக்குள் போட்டி. இவ்வாறு அவர் பேசினார். நடிகர் மோகன்லால் பேசும்போது, இப்போது உள்ள இளம் நடிகர் கமல் போல் நடித்து பேர் புகழ் பெறலாம். ஆனால் கமலாகவே மாற முடியாது. கமல் என்றைக்கும் கமல்தான் என்றார். வெங்கடேஷ் பேசும்போது:- நான் சென்னை டான் போஸ்கோ பள்ளியில்தான் படித்தேன். லயோலா கல்லூரியில்தான் படித்தேன். அப்போது கமல் படம் என்றால் தியேட்டரில் விசில் அடித்து ஆடி கொண்டிருப்பேன். இந்தியன்-10 தடவை, குணா 20 தடவை என அவரின் படங்களை பலமுறை பார்த்துள்ளேன். பார்த்து கொண்டிருக்கிறேன் என்றார். இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், “இது குடும்ப விழா. நேற்று சரஸ்வதிக்கு பூஜை இன்று அவரது மகனுக்கு பூஜை. அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் கடவுள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்றார்.