ஆந்திராவை கலக்கும் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார்
எம்.ஜி.ஆர். , எம்.ஜி.ஆர்தான். அவருக்கு இணையான நடிகர் எவருமில்லை.
அப்போது மட்டுமல்ல இப்போதும் அவர் படங்கள் திரையிடப்பட்டால் அரங்கு நிறைகிறது. விசில் பறக்கிறது.
இளைஞர் கூட்டம் அவரின் போஸ்டருக்கு கையில் கற்பூரம் ஏந்தி காட்டுகிறது. அறிமுக காட்சியில் பூக்கள், காசுகள், ரூபாய் நோட்டுக்கள் வீசப்படுகின்றன.
பாடல்களுக்கு ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டு திரையரங்கமும் பாடலை மறுபடியும் காட்டுகிறது. இறந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் இத்தனை ரசிகர்கள் இருப்பது அதிசயம்.
எம்.ஜி.ஆருக்கு இத்தகையை வரவேற்பு தமிழ்நாட்டில் மட்டுமல்ல. ஆந்திராவிலும்தான்.
சமீபத்தில் சிரஞ்சீவி மகன் நடித்து வெளிவந்த படம் மஹதீரா. படம் சூப்பர் ஹிட். ரஜினி உட்பட பல பிரபலங்கள் பாராட்டினார்கள் இப்படத்தை.இப்படத்தின் தமிழ் உரிமையை கலைப்புலி தாணு வாங்கியிருக்கிறார். அஜீத் நடிக்கவிருப்பதாக தகவல்.
ஆந்திர மாநிலம் நகரியிலும் இப்படம் திரையிடப்பட்டது. இங்கு வசிக்கும் மக்களில் பலர் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பேசுகிற வழக்கம் உடையவர்கள். அதனால் தமிழ் படங்களும் இங்கே திரையிடப்படுவது வாடிக்கை. மஹதீரா படத்தின் வசூலை பார்த்த தமிழ் பட விநியோகஸ்தர்கள் தமிழின் முன்னணி ஹீரோக்களின் படங்களை திரையிட்டு பார்த்தார்கள். ஈடுகொடுக்க முடியவில்லை. வசூல் பெப்பே காட்டிவிட்டது.
பின்பு விநியோகஸ்தர் இந்திரன் என்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் . நடித்த அடிமைப்பெண் படத்தை திரையிட்டார். அப்புறம் பாருங்கள் ஆச்சர்யத்தை. மகதீரா திரையிட்ட அரங்குகள் காத்து வாங்க ஆரம்பித்துவிட்டது.
அடிமைப்பெண் திரையிட்ட திரையரங்குகளின் அரங்கு நிறைந்தது. வசூலை வாரிக்குவித்தது.
-வடபழனிவாலு