அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலவழி கல்வியை ரத்து செய்ய வேண்டும்: தமிழறிஞர்கள் கூட்டமைப்பு
சென்னையில் தமிழறிஞர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்கள் பொன்னவைக்கோ, முத்துக்குமரன் மற்றும் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உள்பட பல தமிழறிஞர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது தமிழறிஞர்கள் கூட்டமைப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து குமரிஅனந்தன் கூறியதாவது:- இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பள்ளிக்கல்வி மொழியாக தமிழ் விளங்கிவருகிறது. 1954-ம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் அப்போதைய தமிழக கல்வித்துறை அமைச்சர் சி.சுப்பிரமணியன் தலைமையில் கல்வித்துறை சீரமைப்பு குழு ஏற்படுத்தப்பட்டது. இது சட்டத்துறை, பொறியியல் துறை, மருத்துவத்துறை போன்ற துறைகளில் உள்ள ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.
இதற்கான கலைக்களஞ்சியத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக அன்றைய தமிழக அரசு வெளியிட்டது. இது தவிர கட்சி எல்லைகளையும் தாண்டி அண்ணா, நெடுஞ்செழியன், பா.ஜீவானந்தம், மீனாட்சி சுந்தரனார் மற்றும் நாராயணசாமி பிள்ளை போன்ற தமிழ் வல்லுனர்கள் கொண்ட குழுவை நியமித்து ஆங்கில வார்த்தைகள் அனைத்தும் தமிழ்ப்படுத்தப்பட்டன. ஆங்கிலத்தில் நடத்தப்பட்டு வந்த அகில இந்திய தேர்வுகளை தமிழில் நடத்தும் அனுமதியை காமராஜர் அன்றைய பிரதமர் நேருவிடம் பேசி பெற்று தந்தார். இவ்வாறு அன்றைய ஆட்சியாளர்கள் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் தமிழ்மொழி வழியிலான கல்வியை ஊக்குவித்து வந்தனர். அப்போது ஆங்கில வழிக்கல்வி சில தனியார் பள்ளிக்கூடங்களில் மட்டுமே போதிக்கப்பட்டு வந்தது. பின்னர் சிறிது சிறிதாக இவை தமிழகத்தில் புற்றீசல் போல வளர்ந்தது. தற்போது தமிழக அரசே தாம் நடத்தும் தொடக்கப்பள்ளிகளில் பலவற்றை தேர்ந்தெடுத்து ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க முடிவு எடுத்து ஆணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இதுவரை தனியார் பள்ளிகளில் மட்டுமே பயிற்று மொழியாக இருந்த ஆங்கிலம் தற்போது அரசு பள்ளிகூடங்களிலும் பயிற்று மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது.
அரசின் இந்த செயல் ஆங்கிலவழிக் கல்வியை வலிமைப்படுத்தி தமிழ்நாட்டில் தமிழ்மொழிக்கு இடமே இல்லாமல் செய்து விடும். எனவே தமிழ்வழிக் கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு, அறிஞர் குழுக்களை அமைத்தும், பல்கலைக்கழகங்களின் கருத்துரைகளைப் பெற்றும், கருத்தரங்குகள் நடத்தியும், சட்டப்பேரவையில் விவாதித்தும் சிறந்ததொரு முடிவை எடுத்து தமிழ்மொழி நிலைக்க வழிகாண வேண்டும். அரசு பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலம் வழியாக கல்வி கற்பதையும், கற்பிப்பதையும் உடனடியாக ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தமிழறிஞர் கூட்டமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குமரி அனந்தன் கூறினார்.