சிதம்பரம்: பஸ்சில் இருந்து தவறி விழுந்த 6ம் வகுப்பு மாணவி பின்சக்கரம் ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்தார்
சிதம்பரம் பஸ் நிலையத்தில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த 6-ம் வகுப்பு மாணவி மீது பஸ் சக்கரம் ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நற்கரவந்தன்குடி கிராமத்தை சேர்ந்தவர் தினகரன். இவரது மகள் தீபிகா (வயது 11). இவர் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
வெள்ளிக்கிழமை பள்ளிக்கூடத்திற்கு வந்த மாணவி தீபிகா மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக சிதம்பரம் பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது நற்கரவந்தன்குடி வழியாக நஞ்சமகத்து வாழ்க்கை செல்லும் அரசு டவுன் பஸ் வந்தது. அந்த பஸ் நிற்பதற்குள் பஸ்சை பார்த்ததும் தீபிகா உள்பட சக மாணவ-மாணவிகள் ஓடிச்சென்று பஸ்சின் முன் படிக்கட்டு வழியாக உள்ளே முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்றனர்.
அப்போது தீபிகா திடீரென தவறி கீழே விழுந்தார். இதனால் பஸ்சின் பின்சக்கரம் தீபிகா மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த தீபிகாவை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீபிகாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.