குடிபோதையில் கோர்ட்டுக்கு வந்ததாக கூறுவதா? கணவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன்: நடிகை ஊர்வசி பிரபல நடிகை ஊர்வசிக்கும், நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் 12 வயதான குஞ்ஞாச்சா என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக ஊர்வசி கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். அதைத் தொடர்ந்து குஞ்ஞாச்சா மனோஜ் கே.ஜெயனின் பராமரிப்பில் உள்ளார்.
மகளை தன்னுடைய பராமரிப்பில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று ஊர்வசி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டில் விசாரணை நடந்தது.
விசாரணைக்கு மனோஜ் கே.ஜெயன் மகள் குஞ்ஞாச்சா உடன் வந்திருந்தார். அப்போது அவர் ஊர்வசி குடிபோதையில் கோர்ட்டிற்கு வந்துள்ளார். பல ஆண்டுகளாக போதைக்கு அடிமையாக உள்ளார். அவருடன் குழந்தை செல்ல மறுத்துவிட்டது என்று கூறினார்.
இதற்கு நடிகை ஊர்வசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் குடிபோதையில் கோர்ட்டுக்கு வந்ததாக அவர் கூறுவதை மறுக்கிறேன். என்னை போதை அடிமை என்று எப்படி கூறலாம். இதனால் சமூகத்தில் எனக்குள்ள மரியாதைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மனோஜ் கே.ஜெயன் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். இதுபோல் தேவையில்லாத வதந்திகளை பரப்பும் செயலை அவர் நிறுத்திக் கொள்ளவேண்டும்.