குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: திருமாவளவனிடம் பிரதமர் ஆதரவைக் கோரினார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஆதரவளிக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனிடம் பிரதமர் தொலைபேசி வழியே ஆதரவு கோரியதாக அக்கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்திக் குறிப்பில் மேலும், "இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவனை சனிக்கிழமை மாலை 5.45 மணியளவில் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, தொல்.திருமாவளவனிடம் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கடசியின் ஆதரவைக் கோரினார். இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பதில் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்தறிய விரும்புவதாகவும் தொல்.திருமாவளவனிடம் அவர் கேட்டார்.
குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பது என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு. ஆகவே, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரையே விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிக்கும் என்று மன்மோகன் சிங்கிடம் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.