அதிமுக அரசு வந்த ஓராண்டில் நூறாண்டு வேதனையை மக்களுக்கு கொடுத்திருக்கிறது! கே.என்.நேரு பேச்சு!
மத்திய அரசு, பெட்ரோல் விலையை குறைக்கக் கோரியும், பால் விலை, பேருந்து கட்டணம், மின் கட்டண உயர்வினை குறைக்காத தமிழக அரசை கண்டித்தும் 30.05.2012 புதன்கிழமை காலை 10 மணி அளவில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,
இதற்கு முன்பு தலைமைக் கழகம் அறிவித்த போராட்டங்களில் எல்லாம் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்துவார். ஆனால் தென்சென்னையில் கலைஞரே தலைமையேற்று இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். பகல் என்றால் இரவு வரும், இரவு என்றால் பகல் வரும். அடுத்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் முதல் அமைச்சராக கலைஞர் வருவார் என்பதற்கு தென்சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்துகொண்டதே சாட்சி.
இந்த ஒரு வருட ஆட்சியில் ஜெயலலிதா மக்களின் அடிப்படை தேவைகளான பால், மின்சாரம், பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டார். ஆனால் பெட்ரோல் விலை உயர்வை மட்டும் கண்டித்து அதிமுக அரசு ஆர்ப்பாட்டம் நடத்தியது. இது அதிமுக அரசின் நாடகம் என்பது மக்களுக்கு புரிந்துவிட்டது. அதிமுக அரசு ஓராண்டு சாதனை செய்ததாக கூறுகிறது. ஆனால் அதிமுக அரசு வந்த ஓராண்டில் நூறாண்டு வேதனையை மக்களுக்கு கொடுத்திருக்கிறது என்றார்.ஜெடிஆர்