கலைஞனை விட, ரசிகனுக்குத்தான் ரசனை அதிகம்: கமல் பேச்சு
ஓவியர் ஸ்ரீதர், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு கலைக்கூடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் பல்வேறு வகையான ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியக்கூடத்தை நடிகர் கமல்ஹாசன் நேற்று மாலை திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:
ஸ்ரீதர் என் மீது அன்பு கொண்டவர். என்னை ஓவியங்களாக வரைந்து அவைகளை எனக்கு அன்பளிப்பாக கொடுத்து இருக்கிறார். அந்த ஓவியங்களை எல்லாம் என் அலுவலகத்தின் முன்பு வைத்து இருக்கிறேன். நம் கலைகள் இன்னும் நவீனத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.
சினிமா மட்டுமல்லாமல், ஓவியங்களும் இப்போது டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்ப நாம் மாற வேண்டும். கலைஞனை நம்பி செலவு செய்தால்தான் கலை வளர முடியும்.
கோவிலுக்குள் இருப்பவர்களை விட, வெளியில் இருப்பவர்களுக்குத்தான் பக்தி அதிகம். அதேபோல் கலைஞனை விட, ரசிகனுக்குத்தான் ரசனை அதிகம். நானே வேறு படங்களை பார்க்கும்போது, நல்ல கலைஞனாக மாறியிருக்கிறேன்.'' இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
கமல்ஹாசன் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:
என் இயக்கம் மற்றும் துணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் விஸ்வரூபம்' படத்தின் முன்னோட்டம், ஜுன் 2012 ல் சிங்கப்பூரில் நடைபெற உள்ள 13 வது சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் முதல் முறையாக திரையிடப்பட இருக்கிறது.
விஸ்வரூப்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தி பதிப்பின் முன்னோட்டம், ரபல்ஸ் நகர கன்வென்ஷன் மையத்தில் ஜுன் 8 ந் தேதி முதல்முறையாக வெளியிடப்பட உள்ளது.
என்னுடன் ராகுல் போஸ், ஆன்ட்ரியா ஜெர்மியா, பூஜா குமார், ஜெய்தீப் லாவத், சாம்ராட் சக்கரவர்த்தி, ஜெரினா வகாப், சேகர் கபூர் ஆகியோரின் சிறப்பு தோற்றத்துடன் இந்த படம் உருவாகி உள்ளது.
ஜுன் 7 முதல் 9 வரையிலான தேதிகளில் சிங்கப்பூர் லயன் சிட்டியில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகைகள் ராதிகா சரத்குமார், ஸ்ரேயா, தெலுங்கு பட அதிபர்கள் கே.எஸ்.ராமாராவ், சுரேஷ்பாபு, அல்லு அரவிந்த் மற்றும் பலர் பங்கேற்கிறார்கள். பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.''
மேற்கண்டவாறு கமல்ஹாசன் கூறினார்.