ஊழலை அம்பலப்படுத்தியவர் அடித்து கொலை
ஊழலுக்கு எதிராக, தொடர்ந்து போராடி அம்பலப்படுத்தியதால், மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, ஐந்து நாட்களாக மருத்துவமனையில் உயிருக்கு போராடிய, கர்நாடக கூட்டுறவு சங்க தணிக்கை உதவி இயக்குனர் மகந்தேஷ், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கர்நாடக கூட்டுறவு சங்க தணிக்கை உதவி இயக்குனராக பணியாற்றியவர் மகந்தேஷ்,48. பல கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் நடந்த ஊழல்களை, "ஆடிட்டிங்' செய்த போது, பல முறைகேடுகளை கண்டுபிடித்தார். இதையடுத்து, ஆடிட்டிங்கின் போது, எதையும் கண்டு கொள்ளக்கூடாது என்று, இவருக்கு மிரட்டல் விடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 15ம் தேதி இரவு 8.30 மணியளவில், பெங்களூரு பேலஸ் ரோட்டில், தலைமை நீதிபதியின் வீட்டினருக்கில், சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, அவர் மயங்கி விழுந்து கிடந்தார்.
இதை பார்த்தவர்கள், அவரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, கோமா நிலையில் இருந்த அவருக்கு, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. மகந்தேஷ் தாக்கப்பட்டதற்கான காரணங்களை, போலீசார் விசாரித்து வந்தனர்.
கடந்த ஐந்து நாட்களாக, உயிருக்கு போராடி வந்த மகந்தேஷ், சிகிச்சை பலனின்றி, நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். மகந்தேஷ் உடல், பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சாம்ராஜ்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, முதல்வர் சதானந்த கவுடா அஞ்சலி செலுத்தினார். அப்போது, அங்கிருந்த சிலர், முதல்வருக்கு எதிராகவும், பா.ஜ., அரசுக்கும் எதிராகவும் கோஷமிட்டனர்.இதை பொருட்படுத்தாத முதல்வர் சதானந்த கவுடா, நிருபர்களிடம் கூறுகையில், ""மகந்தேஷ் மரணம் அரசுக்கு வருத்தமளிக்கிறது.
விரைவில், கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படுவர். மகந்தேஷ் குடும்பத்தினருக்கு, எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.