திரும்பத் திரும்பக் குற்றஞ்சாட்டுகிறார்கள் : கலைஞர்
ரூ.1.25 லட்சம் கோடி கடன் சுமையை தி.மு.க. அரசு ஏற்றி வைத்துவிட்டதாக திரும்ப திரும்ப சொல்வது தவறு என்று கலைஞர் கூறியுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் மொத்தத்தில் கடுமையான இழப்பை எய்தியுள்ளள'' என்று தணிக்கை அறிக்கை தெரிவிப்பதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறார்.
பொதுவாக பொதுத்துறை நிறுவனங்கள் லாப நோக்கோடு நடத்தப்படுவதல்ல. அ.தி.மு.க. ஆட்சியிலேயும் எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் லாபத்தோடு இயங்கவில்லை. கட்டணங்களை கடுமையாக உயர்த்தி- விலையை தாறுமாறாக அதிகரித்து மக்களைக் கசக்கிப்பிழிந்தால், பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தோடு நடத்திட முடியும். ஆனால் அது ஒரு மக்கள் நலச் சர்க்காரின் இலக்கண மல்ல! யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று கண்ணை மூடிக்கொண்டு கட்டணங்களை உயர்த்தினால் லாபம் ஏற்படத்தான் செய்யும்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது 20-11-2011 தேதிய அறிக்கையில், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தில் இயங்க காரணம், கடந்தகால தி.மு.க. ஆட்சிதான் என்று சொல்லியிருக்கிறார். அதை அப்படியே "காப்பி'' அடித்துத்தான், தற்போது நிதித்துறை அமைச்சரும் கூறியிருக்கிறார். சில உதாரணங்களைக் கூறுகிறேன்.
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று "சிப்காட்''. 2001-2002ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 11.76 கோடி ரூபாய் நஷ்டம். 2002-2003-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 29.15 கோடி ரூபாய் நஷ்டம். 2006-2007-ம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி காலத்தில் 56.69 கோடி ரூபாய் லாபம். 2007-2008ம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி காலத்தில் 96.54 கோடி ரூபாய் லாபம். 2008-2009-ம் ஆண்டு 90.38 கோடி ரூபாய் லாபம். 2009-2010-ம் ஆண்டு, தணிக்கைக்கு முன்பு 93.11 கோடி ரூபாய் லாபம்.
தமிழக அரசின் கடன் விவரங்கள் பற்றி அரசின் சார்பில் பலமுறை ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளேன். இந்த ஆட்சியினர் மீது 1.25 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை தி.மு.கழக அரசு ஏற்றி வைத்து விட்டதாக திரும்பத் திரும்பச் சொல்வது தவறு. 31-3-2006 அன்றே, ஜெயலலிதா ஆட்சி புரிந்த ஐந்தாண்டு காலத்திற்கு பிறகு; தமிழக அரசின் மொத்தக்கடன் பொறுப்பு 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாகும்.
இது ஜெயலலிதா, தி.மு.கழக அரசின் மீது ஏற்றி வைத்து விட்டுச் சென்ற கடன் சுமை. அந்த கடன் சுமையைக் குறைக்க தி.மு.கழக அரசு எந்த வரியையும் விதிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திற்குள்ளாகவே சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு வரிகளைச் சுமத்திவிட்டு, பால் விலையை உயர்த்திவிட்டு, பேருந்து கட்டணத்தை அதிகரித்துவிட்டு, மின் கட்டணத்தை ஏற்றி விட்டு கடந்த கால அரசைக் குறை கூறுவதில் நியாயம் என்ன இருக்கிறது?
நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தனது நீண்ட அறிக்கையில், தி.மு.க. ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை இருந்தது என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் 536.54 கோடி ரூபாய் அளவுக்கு பெரு முயற்சி செய்து வருவாய் உபரியாக ஆக்கியதைப் போலவும் சொல்லியிருக்கிறார். 2011-ம் ஆண்டு மே திங்களில் அ.தி.மு.க. பதவியேற்பதற்கு முன்பு 5-2-2011 அன்று தி.மு.கழக அரசின் சார்பாக இடைக்கால நிதி நிலை அறிக்கை பேராசிரியரால் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த நிதி நிலை அறிக்கையின் "2011-2012-ம் நிதியாண்டின் இறுதியில் வருவாய் பற்றாக்குறை நீங்கி ரூபாய் 439 கோடி அளவிற்கு வருவாய் உபரி இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது'' என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இதிலிருந்து கழகம் ஆட்சியில் இருந்தபோதே தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலேயே 439 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் உபரி இருக்கக் கூடிய அளவிற்கு நிலைமை இருந்தது என்பதை அமைச்சர் பன்னீர் செல்வம் வசதியாக மறைத்து விட்டு, கழக ஆட்சியிலே வருவாய் பற்றாக்குறையாகத்தான் இருந்ததைப் போலவும், அ.தி.மு.க. ஆட்சியிலேதான் வருவாய் உபரி, அவர்களின் திறமையினால் தான் செய்யப்பட்டதைப் போலவும் பீற்றிக்கொண்டிருப்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது!
பன்னீர்செல்வம் அண்மையில் படித்த நிதிநிலை அறிக்கையில் "2012-2013-ம் ஆண்டின் இறுதியில் மாநிலத்தின் மொத்தக்கடன் 1,35,060.47 கோடி ரூபாயாக இருக்கும். எனினும், இது பதின்மூன்றாவது நிதிக்குழு அனுமதித்துள்ள அளவான, மாநில உற்பத்தி மதிப்பில் கடனின் விகிதாச்சார அளவு 24.8 சதவீதம் என்பதை விட குறைவாக, 19.6 சதவீத அளவிலேயே இருக்கும்'' என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்தே; தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதிக்குறியீட்டில் எந்த தவறையும் கழக ஆட்சி செய்துவிடவில்லை என்பதை அறியலாம். ஆனாலும் தி.மு.கழக அரசு கடன் சுமையை வைத்துவிட்டதாக அமைச்சர் தனது அறிக்கையிலே சொல்லி இருக்கிறார்.
கழக ஆட்சி வாங்கி வைத்துவிட்டுப்போன கடன் சுமையை எல்லாம் தாங்கள் குறைக்க வேண்டியதாக உள்ளது என்று சொல்கிறார்களே, ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறதே; எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைத்திருக்கிறார்கள்? கடனை அடைக்க வேண்டாம், வாங்காமலாவது இருந்தார்களா? நிதிநிலை அறிக்கையிலேயே 12,873.81 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே நடப்பாண்டில் கடன் பெற்றிருப்பதாக பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அதுமாத்திரமல்ல, வரும் ஆண்டில் வாங்கப்போகும் கடன் அளவை 18,387.47 கோடி ரூபாய் அளவிலேயே கட்டுப்படுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது என்றும் பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த லட்சணத்தில்தான் ஆட்சிக்கு வந்தவுடன்- 2006-ம் ஆண்டுக்கு முன்பு ஐந்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தபோது அ.தி.மு.க. அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதையே மறந்து விட்டு, கழக அரசு கடன் சுமையை வைத்து விட்டுப்போனதாக திரும்பத் திரும்பக் குற்றஞ்சாட்டுகிறார்கள். நிதி அமைச்சர் தணிக்கை துறை அறிக்கையில் காணப்பட்ட சில புள்ளி விவரங்களை முன் வைத்து கழக அரசின் மீது சேறுவாரி வீச முற்படுகிறார்’’ என்று கூறியுள்ளார்.