அப்போது ஈழம் எழுந்து உட்காரும் :
அதிமுக அமைச்சர் பா.வளர்மதி பேச்சு
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவுபெற்றது. இதையொட்டி, சட்டசபையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும், அமைச்சர்களும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி பேசினார்கள்.
அமைச்சர் பா.வளர்மதி, ‘’நூறாண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான உரத்தை, ஓராண்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு அள்ளித்தெளித்துள்ளது.
திரித்து எழுதிய தீர்ப்புகளை திருத்தி எழுதிக்காட்டியிருக்கிறார் நம் முதல்-அமைச்சர். வரலாற்றின் ஏடுகளில்-சிலர் சேதார கணக்காகவே செலவு பக்கங்களில் இருக்கிறார்கள். ஆதாயக்கணக்கில், ஜெயலலிதாவை மட்டுமே வரலாறு வரவு வைத்து இருக்கிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா கூரிய அறிவுத்திறன் கொண்டவர், விவேகமுள்ள நிர்வாகி என்றும், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த உறுதி பூண்டிருக்கிறார் என்று அமெரிக்க நிறுவனம் பாராட்டு தெரிவித்து இருக்கிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா, பல்வேறு துறைகளில் புரட்சி செய்து சாதனை படைத்துள்ளார். ஆனால், சிலர் "புரட்சி'' என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாமல், புரட்சி என்று போட்டுக்கொள்கிறார்கள். அம்மா ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு துறையிலும் புரட்சி செய்துள்ளார். ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து அவர் செய்துள்ளவை எல்லாமே புரட்சிதான். ஆனால், புரட்சியே செய்யாமல் புரட்சி என்று சொன்னால் யார் ஏற்பார்கள்?
தமிழ்நாட்டில் புரட்சி என்ற சொல்லுக்கு பொருத்தமானவர்கள் இருவர்தான். ஒன்று மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். இரண்டாவது நம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
முதலமைச்சர் ஜெயலலிதா, இதுவரை எதற்கும் அஞ்சியதில்லை, இனி எதற்கும் அஞ்சப் போவதுமில்லை என்றார். அவருடைய அறிவாற்றல் அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது. அவருடைய துணிவு இந்த சிம்மாசனத்தில் அவரை அமர்த்தி இருக்கிறது. அவருடைய அறிவும், துணிவும் இந்தியாவின் உச்ச சிம்மாசனத்தில் அவரை உட்காரவைக்கத்தான் போகிறது. அப்போது, ஒரு காலத்தில் பறவைகளின் பாட்டரங்கமாக இருந்து, இன்று அழுகுரல் கூடமாகிவிட்ட ஈழம், எழுந்து உட்காரும்.
பென்னிகுவிக் மீண்டும் பிறந்து வருவான். முல்லைப்பெரியாறு தடையின்றி வரும். கானல் நீர் ஓடிக்கொண்டிருக்கிற காவிரி ஆற்றின் கண்ணீர் துடைத்து, மீண்டும் கானல் வரிபாட இளங்கோவடிகள் எழுந்து வருவார். வடதமிழ்நாட்டின் தாய்ப்பாலம் பாலாறு, மீண்டும் பாய்ந்தோடி வரும். வரச்செய்வார் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. நீராறு ஓடும் தமிழ்நாட்டில், தேனாறும், பாலாறும் ஓடும். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் அதிகாரம் வரும்’’என்று பேசினார்.