ஐஜி பிரமோத்குமாருடன் உடந்தை : சிக்குகிறார் பெண் டிஜஜி!
திருப்பூர் பாசி போரெக்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.1500 கோடி மோசடி செய்துள்ளது. இந்த மோசடி குறித்து விசாரிக்காமல் இருப்பதற்காக பாசி நிறுவன பங்குதாரர்களிடம் ஐ.ஜி.பிரமோத்குமார் ரூ.2 கோடியே 85 லட்சம் பணம் பறித்ததாக எழுந்த புகாரின் மீது சி.பி.ஐ. போலீசார் அவரை கைது செய்தனர். பிரமோத்குமாரை 5 நாள் சி.பி.ஐ. போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். விசார ணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இது குறித்து சி.பி.ஐ. உயர் அதிகாரி, ‘’பிரமோத்குமார் ஐ.ஜி.யாக இருந்தபோது பெண் டி.ஐ.ஜி. ஒருவருடன் நல்ல பழக்கத்தில் இருந்துள்ளார். இதன் காரணமாக ஐ.ஜி. பிரமோத்குமார் சொல்லும் வேலைகளை அவரும் தட்டாமல் செய்து கொடுத் துள்ளார். அந்த வகையில்தான் இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோரை கைப்பாவையாக வைத்து பாசி நிறுவன பங்குதாரர்களை கடத்தி சிறை வைத்துள்ளனர். அவர்களை கடுமையாக மிரட்டி கோடிக் கணக்கில் பணம் கேட்டுள்ளனர். இதில் ஐ.ஜி.பிரமோத்குமார் நேரடியாகவே பாசி நிறுவன பங்குதாரர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பெரும்பாலும் ஐ.ஜி. பிரமோத்குமார் சாதாரண உடையி லேயே தனது காரில் வலம் வந்துள்ளார். பாசி நிறுவன பங்குதாரர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்தை அவர்தான் பெற்றுள்ளார். அந்த பணத்தின் மூலம் கோவை மற்றும் ஊட்டி பகுதிகளில் நிலம் மற்றும் வீடு வாங்கியதாக தெரிகிறது. அதுகுறித்த ஆவணங்களை சேகரித்து வருகிறோம். மேற்கு மண்டல ஐ.ஜி. யாக இருந்தபோதுதான் சென்னையிலும், டெல்லியிலும் புதிய வீடு வாங்கி இருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது. எந்த ஒரு பாதுகாப்பு பணிக்கு சென்றாலும் ஐ.ஜி. பிரமோத்குமார் அந்த பெண் டி.ஐ.ஜி.யை தனது காரிலேயே உடன் அழைத்து சென்றுள்ளார். அதனால் இந்த பணம் பறிப்பு சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதற்கான போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் முன்னிலையில் ஐ.ஜி. பிரமோத்குமாரிடம் விசாரித்தபோது அவர் சில சம்பவங்களை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வழக்கில் பிரமோத்குமார் மட்டுமல்லாமல் மேலும் சில போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்தில் இருந்துதான் ஐ.ஜி. பிரமோத்குமார் வீடு, நிலம் வாங்கி இருப்பார் என்று சந்தேகிக்கிறோம். இந்த காலகட்டத்தில் ஐ.ஜி. பிரமோத்குமார் கேட்டு கொண்டதற்கிணங்க அந்த பெண் டி.ஐ.ஜி. சில போலீஸ் இன்ஸ்பெக்டர்களை சஸ்பெண்டு மற்றும் இடமாற்றம் செய்துள்ளார். அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. பாசி நிறுவன பங்குதாரர்களிடம் பணம் பறித்த விவகாரத்தில் ஐ.ஜி. பிரமோத்குமாருக்கு எந்த வகையில் அந்த பெண் டி.ஐ.ஜி. உதவியாக இருந்தார் என்பது குறித்து அறிய அவரிடமும் விசாரணை நடத்த உள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.