உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவனை கொல்ல முயற்சி: கள்ளக்காதலனுடன் மனைவி கைது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கள்ளிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் முனியப்பன் (வயது 28). இவரது மனைவி ஆனந்தி (23). ஆனந்திக்கும், அதேபகுதியை சேர்ந்த சாமண்ணன் மகன் மாதையன்(25) என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முனியப்பன் வேலைக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் ஆனந்தியும், மாதையனும் தனிமையில் இருந்ததை முனியப்பன் நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் முனியப்பன் தனது மனைவி ஆனந்தியிடம் தகராறு செய்து அடித்து உதைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தியும், மாதையனும் சேர்ந்து முனியப்பனை செங்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். மேலும், 2 பேரும் சேர்ந்து முனியப்பனின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முனியப்பன் அவர்களின் பிடியில் இருந்து தப்பி வெளியே ஓடிச்சென்று பென்னாகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தி, மாதையன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.