கோவை சாக்கடையில் தவறி விழுந்தவர் மரணம் - சேலத்தில் தவறி விழுந்த பெண் மீட்பு
நேற்று முன்தினம் பெய்த மழையில் சிக்கிய வாலிபர், நிலை தடுமாறி சாக்கடையில் விழுந்து பலியானார் கோவை நீலிக்கோனாம்பாளையம் நேதாஜிபுரத்தை சேர்ந்தவர் பிரவீன், 27. தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவு ஊழியராக வேலை பார்த்து வந்த இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் தானது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது, பலத்த மழை கொட்டியது. மாநகராட்சியால் அமைக்கப்பட்ட சாக்கடைகள் நிரம்பி சாலையில் கழிவு நீர் ஒட்டியது. அந்த நேரத்தில் சாலைகளில் சென்று கொண்டிருந்த பிரவீன் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கார்த்திகேயா மில் அருகேயுள்ள சாக்கடையில் விழுந்தது.
போலீசார் நிகழ்விடத்துக்கு வந்து சாக்கடையில் தேடியபோது தான் சாக்கடை குழிக்குள் ஒரு வாலிபர் பிணம் கிடப்பதும், அவர் நீலிக்கோனாம்பாளையத்தை சேர்ந்த பிரவீன் என்பதும் தெரியவந்தது. சம்பவம் பற்றி இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன், எஸ்.ஐ., பரிமளா விசாரிக்கின்றனர்.இறந்த வாலிபருக்கு, திருமணமாகி, மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிச்சிப்பாளையம் பகுதியில் கருவாட்டுப்பாலம் என்ற ஒரு பாலம் உள்ளது. அந்த பாலத்தின் வழியாக செல்லும் கால்வாயில் தான் சேலத்தின் தென் பகுதியில் இருந்து வரும் சாக்கடை கழிவுகள் அனைத்தும் இந்த கால்வாய் வழியாக செல்கிறது.
நேற்று மாலை, சேலம் மாநகரப் பகுதியில் கனத்த மழை பெய்தது. அப்போது, தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த வெண்ணந்தூரைச் சேர்ந்த திலகவதி வயது-55, என்பவர் கால்வாய்க்குள் தவறி விழுந்தார்.
வேகமாக சென்ற சாக்கடை கழிவு நீரில் 200 அடி தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டார். அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் சிலர் உடனடியாக கழிவு நீர் ஓட்டையில் இறங்கி அந்த பெண்ணை மீட்டனர்.
பல ஆண்டுகளாக, கருவாட்டுப்பாலத்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.