அதிமுக அரசின் அடக்குமுறைக்கு திமுக ஒரு போதும் அஞ்சாது: மு.க.ஸ்டாலின்
சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் திமுக கண்டனப் பொதுக்கூட்டம் சென்னை பெரவள்ளூர் சதுக்கத்தில் (25.04.2012) நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,
சட்டமன்றத்தில் ஜெயலலிதா தவறான தகவல்களை தந்து வருகிறார். அதற்கு பதில் அளிக்க அனுமதி அளிக்காமல் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். திமுக உறுப்பினர்கள் பதில் அளிக்க முயன்றால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். திமுகவினர் மீது பொய்யான நிலஅபகரிப்பு வழக்குள் தொடரப்படுகின்றன. ஜாமீன் பெற்றால் குண்டர் சட்டத்தை ஏவுகிறார்கள்.
இன்றைக்கு தமிழக முதல் அமைச்சராக இருக்கக் கூடிய ஜெயலலிதா மீது நிலஅபகரிப்பு வழக்கு இல்லையா. உச்சநீதிமன்றமே தீர்ப்பு சொல்லியிருக்கிறது. தீர்ப்பில் விபரமாக சொல்லியிருக்கிறது. கொடநாட்டு பிரச்சனை. பொதுமக்கள் பயன்படுத்துகிற வழியை ஜெயலலிதா அபகரித்து வைத்திருக்கிறார். அதை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு போடவில்லையா. சிறுதாவூர் பகுதியில் இருக்கக் கூடிய, தலித் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துக்கொண்டிருக்கக் கூடிய, இதைக் கூட திமுக முதலில் குறை சொல்லவில்லை. இன்றைக்கு ஜெயலலிதாவோட கைகோர்த்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்தான் அன்றைக்கு முதல் அமைச்சராக இருந்த கலைஞரிடம் மனுவாக தந்தார்கள். அது முறையாக விசாரணை நடத்திட வேண்டும். அதற்கென்று ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியன் தலைமையில் அந்த கமிஷன் அமைந்தது. அந்த கமிஷன், தலித்துக்கென்று உள்ள இடம் தான் என்று தீர்ப்பு தந்துள்ளது. ஆகவே இதுவே நிலஅபகரிப்பு வழக்கு. நான் சொல்லவில்லை. தனி நீதிபதி, விசாரணை கமிஷன் அமைத்து தந்த தீர்ப்பு. உச்சநீதிமன்றம் தந்திருக்கக் கூடிய தீர்ப்பு. அந்த அடிப்படையிலே பார்த்தால் கைது செய்யப்பட வேண்டியது யார். முதல் அமைச்சராக இருக்கக் கூடிய ஜெயலலிதாதானே. திமுக சந்திக்காத அடக்குமுறைகளும் இல்லை. திமுக சந்திக்காத சிறைச்சாலைகளும் இல்லை. அதிமுக அரசின் அடக்குமுறைக்கு திமுக ஒரு போதும் அஞ்சாது என்றார்.