ஆட்சியும், அதிகாரமும் நிரந்தரமில்லை என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்! கலைஞர் எச்சரிக்கை!
சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் திமுக கண்டனப் பொதுக்கூட்டம் சென்னை பெரவள்ளூர் சதுக்கத்தில்
கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் கலைஞர்,
எதிர்க்கட்சிகளை ஏளனம் செய்கின்ற, எதிர்க்கட்சிகளை துன்புறுத்துகிற, எதிர்க்கட்சிகளில் உள்ளவர்களை தூக்கி வெளியே வீசுகிற, எதிர்க்கட்சிகளை அறைக்குள் வராமல் தடுக்கிற, எதிர்க்கட்சியினர் பேசினால் வாயை பொத்துகிற, எதிர்க்கட்சியினர் பேசினால் நீ பேசாதே மரியாதையா உட்காரு என்று இவைகளெல்லாம் இன்று நடக்கிற அரசாங்கத்திலே நாம் காணுகின்றோம்.
ஐஸ் மழையாக ஜெயலலிதாவை புகழ்கிறவர்களுக்கு மட்டுமே சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதனால் தான் ஆணவம் உச்சிக்கு ஏறிவுள்ளது. இந்தா ஜெயலலிதா தமிழ்நாடு ராஜ்யம் என்றா உனக்கு எழுதிவைத்துவிட்டார்கள். இல்லை. ஆட்சிகள் மாறலாம். அப்படி மாறும்போது இப்போதே சொல்லி வைக்கிறேன், பதிலுக்கு பதில் நாங்கள் செய்ய மாட்டோம். பழிவாங்க மாட்டோம்.
உடன் பிறந்த சகோதரி என்று அழைக்கவும் தெரியாது. பின் உடன்பிறந்த சகோதரியை வீட்டை விட்டு வெளியேற்றவும் தெரியாது. உடன்பிறந்த சகோதரியின் கணவனை, அந்த கணவனே போலீசாரிடம் போய் என் உயிருக்கு உத்திரவாதமில்லை என்று கெஞ்சி கூத்தாடுகின்ற அளவிற்கு நிலைமையை ஏற்படுத்தவும் தெரியாது. நாங்கள் மனிதாபிமானம் உள்ளவர்கள். நாங்கள் பகையை எங்களுடைய பண்பால் வெல்வோம் என்றார்.