புதுவையில் ஓட்டல், பேக்கரிகள் மூடல்
மாநில அரசு விதித்த 10 சதவீத வாட்வரியை கண்டித்து புதுவையில் ஓட்டல்கள், பேக்கரிகள், ஸ்வீட் ஸ்டால்கள் இன்று மூடப்பட்டன.புதுச்சேரியில் கடந்த ஜனவரி முதல் உணவு பொருட்களுக்கு ஸ்வீட்ஸ், டிபன் வகைகள், பேக்கரி வகைகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2 சதவீத வரி மட்டுமே உயர்த்தப்பட்டது. பெரிய மாநிலங்களான மும்பை, குஜராத் ஆகியவற்றில் வரி இல்லாத நிலையில் சிறிய மாநிலமான புதுவையில் உயர்த்தப்பட்ட கடுமையான வரியால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
ஓட்டல், பேக்கரிகளில் உணவு பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. வாட்வரி உயர்வால் விற்பனை குறைந்ததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். 10 சதவீத வரி என்பது அதிகமான தொகை என்பதால் அதனை மக்களிடமே வசூலிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் புதிய வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓட்டல், ரெஸ்டாரண்டுகள், பேக்கரி கடைகளை அடைத்து, இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி சங்கத்தினர் அறிவித்தனர். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
புதுச்சேரியில் உள்ள 556 ஸ்வீட் கடைகள், 555 பேக்கரி கடைகள், 123 ஓட்டல்கள், 892 இரவு நேர டிபன் கடைகள், 664 ரெஸ்டாரண்டுகள், 1205 காபி பார்கள் ஆகியவற்றை சேர்த்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. காலை 6 மணிக்கு தொடங்கிய வேலைநிறுத்தம் நாளை காலை 6 மணிவரை (24 மணிநேரம்) நீடிக்கிறது. பேக்கரி கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.