சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு கொழும்பு பயணம்

இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு பணிகளைப் பார்வையிடுவதற்காக, சுஷ்மா சுவராஜ் தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசின் உதவியுடன் பல்வேறு மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளைப் பார்வையிடுவதற்காக, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 16 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.), காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன், சித்தன், கிருஷ்ணசாமி, மாணிக் தாகூர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் டி.கே.ரங்கராஜன், ரபிபெர்னாட் (அ.தி.மு.க.) ஆகிய 7 பேர் இடம் பெற்று இருந்தனர்.
எம்.பி.க்கள் குழுவின் இலங்கை பயணம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், அதனால் எந்த பயனும் இல்லை என்றும் கூறி, குழுவில் இருந்து அ.தி.மு.க. விலகுவதாக, முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இதற்கிடையில், இந்த குழுவில் இருந்து தி.மு.க.வும் விலகுவதாக, திமுக தலைவர் கலைஞர் அறிவித்து விட்டார்.
இந்த நிலையில், நேற்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த சிவானந்த திவாரி, திரிணாமுல் காங்கிரசின் சுதன்சு ரஞ்சன் ஆகிய இரு எம்.பி.க்களும் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து, சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவில் இடம் பெற்றுள்ள மற்ற எம்.பி.க்கள் நேற்று மாலை இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
6 நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கும் குழுவினர், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கலுதரா, டிக்கோயா, ஹட்டன் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்குச் சென்று, தமிழர்கள் மறுவாழ்வுக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு பணிகளைப் பார்வையிடுகிறார்கள்.
வடக்கு இலங்கையில் மாணிக்பார்ம் முகாமில் அகதிகளாக உள்ள தமிழர்களை முதலில் பார்வையிடும் குழுவினர் பின்னர் அங்கிருந்து மற்ற இடங்களுக்கு செல்வார்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையில் உள்ள எம்.பி.க்கள், அரசியல் தலைவர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் சமுதாய தலைவர்களையும் அவர்கள் சந்தித்து பேசுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.