மாணவர்கள் தொடர்பான செய்தி கவலை அளிக்கிறது: நன்னடத்தை வகுப்பு நடத்துமாறு வழக்கு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த வக்கீல் காசிநாதபாரதி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவில் கூறி இருப்பதாவது: கடந்த சில வாரங்களாக பத்திரிகைகளில் ஆசிரியர் மாணவர்கள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் கவலை அளிக்கிறது. சென்னையில் பள்ளி மாணவன், உமாமகேஸ்வரி என்ற ஆசிரியையை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான். தாம்பரத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் 4 பேர் சேர்ந்து தங்களுடன் படித்த மாணவியை கற்பழித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த பீர்பாட்டில் வெடித்து இறந்து போனான். சென்னையில் 17 வயது பள்ளி மாணவனை 37 வயது ஆசிரியை கடத்திச் சென்றார். இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆரம்ப காலகட்டத்தில் பள்ளிகளில் தனியாக நன்னடத்தை வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது எந்த பள்ளியிலும் நன்னடத்தை வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. இதனால்தான் மாணவர்கள் தவறான வழியில் சென்று விடுகிறார்கள். பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை வசதிகளும் இல்லை. இதனாலும் மாணவ மாணவிகளின் மனதை பாதிக்கிறது. இந்த குறைகளை நிவர்த்தி செய்ய கேட்டு பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு மனு கொடுத்தேன். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தொடக்க கல்வி மாணவர்களுக்கு நன்னடத்தை வகுப்புகளை கற்றுக்கொடுக்க தனியாக பாடத்திட்டத்தை வகுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் மாணவர்களுக்கு நன்னடத்தை வகுப்புகள் நடத்துவது தொடர்பாக மனுதாரர் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படி அரசின் கல்வித்துறை செயலாளர், பள்ளி கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.