கவுன்சிலர்களின் கணவர்கள் ஆணையாளருடன் மோதல்
வாணியம்பாடி நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் சுகாதார மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நகரசபை தலைவர் டாக்டர் நீலோபர்கபீல் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த உறுப்பினர் விவாதங்கள் :
கவுன்சிலர் கோவிந்தராஜ்:- துப்புரவு பணியாளர்கள் முறையாக பணிக்கு வருவது இல்லை. மொத்த உறுப்பினர்களில் பலர் பினாமிகளை வைத்து பணி செய்கின்றனர்.
தலைவர்:- 2 பேர் தான் தொடர்ந்து விடுப்பு எடுத்து பணிக்கு வராமல் உள்ளனர். மருத்துவ தகுதியில்லாதவர்களை பணி நீக்கம் செய்யலாம்.
கவுன்சிலர் ஜெயலட்சுமியின் கணவர் ராஜா:- மேஸ்திரிகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும், 5 பேர் தொடர்ந்து வேலைக்கு வராமலேயே உள்ளனர்.
50-க்கும் மேற்பட்டவர்கள் பினாமிகளாக வேலை செய்கின்றனர். இவர்களுக்கு ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என்று மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் பணம் தருகின்றனர். இத்தகையவர்களை முழுமையாக நீக்க வேண்டும்.
கவுன்சிலர் தென்னரசு:- ஒரு முறை எச்சரித்து விடலாம் தொடர்ந்து செய்தால் நடவடிக்கை எடுக்கலாம்.
கவுன்சிலர் கமலாவின் கணவர் சின்னதம்பி:- எந்த ஆட்சி என்றாலும் சுகாதார பிரிவில் பிரச்சினைதான் உள்ளது. தற்போது உள்ள நிலையை மாற்ற முன் வர வேண்டும்.
துணைத் தலைவர் விஜயகுமார்:- நகரில் டீ தூளில் கலப்படம், பாலில் கலப்படம் நடக்கிறது. தடுக்க வேண்டும், கோழி கழிவுகளை அகற்ற வேண்டும்.
ஆணையாளர்பராஜேந்திரன்:- சுகாதார பிரிவு குறித்து இங்கு உறுப்பினர்கள் பேசினர். தற்போது வரி வசூல் செய்ய பணியாளர்கள் சிலர் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் பணிக்கு வந்து விடுவார்கள். கடந்த ஆண்டை விடதற்போது குறைவாக வசூல் ஆகி உள்ளது. அதனால் தான் இத்தகைய பணியில் ஈடுபடுத்தும் நிலை உள்ளது. வரி வசூல் செய்ய உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
இவ்வாறு அவர் பேசிக் கொண்டு இருந்தபோது கூட்டத்தில் இருந்த நகர மன்ற உறுப்பினர் பர்ஹானாவின் கணவர் சவுக்கத் திடீர் என எழுந்து ஆணையாளர் வீட்டிற்கு ஒரு ஆணும், அலுவலகத்திற்கு ஒரு ஆணும் பணிக்கு வைப்பது எப்படி நியாயம்ப என்றும் ஆணையாளரை பார்த்து மிகவும் ஆவேசமாக பேசியதால், கூட்டத்தில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது, இதனால் தொடர்ந்து தான் பேசப்போவது இல்லை என்று ஆணையாளர் கூறிவிட்டு அமர்ந்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்தனர். தொடர்ந்து ஆணையாளர் ஒரு சில கருத்துக்களை கூறி அமர்ந்தார். பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் ஆணையாளருடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.