பிளாஸ்டிக் தொட்டியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் எதிரில் இருந்த பிளாஸ்டிக் தொட்டியில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் இருந்தது; சடலத்தை கைப்பற்றிய தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் எதிரில் பூக்கடையும், இளநீர் கடையும் உள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் அங்கு இளநீர் வியாபாரம் செய்யவில்லை; புதிதாக, நீல நிறத்தில் நான்கடி உயரத்தில் பிளாஸ்டிக் தொட்டி (டிரம்) வைக்கப்பட்டிருந்தது. மேல்பகுதி, கறுப்பு நிற மூடியால் மூடப்பட்டிருந்தது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், பிளாஸ்டிக் தொட்டி, குப்பை கொட்ட வைக்கப்பட்டிருக்கலாம் என நினைத்தனர்.
நேற்று மாலை 5.00 மணிக்கு, அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் துவங்கியது. பிளாஸ்டிக் தொட்டி இருந்த பகுதியில் நாற்றம் அதிகமாக இருந்தது. தொட்டியை அதிக அளவில் ஈக்கள் மொய்த்தன. சந்தேகம் அடைந்த சிலர் தொட்டியை நெருங்கி எட்டி பார்த்தபோது, மெட்டி அணிந்த கால்கள் தெரிந்தன.
இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் கூறுகையில், ’’பெண்ணின் காலில் மெட்டி உள்ளதால், திருமணமானவராக இருக்கலாம்; பெண்ணுக்கு 30 முதல் 35 வயது இருக்கலாம்’’என்றார்.
தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஈஸ்வரன் கோவில் எதிரில், மக்கள் நடமாட்டமான பகுதியில் பெண் சடலம் இருந்த சம்பவத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது; கோவில் நடை திறக்கப்படாமல் சாத்தப்பட்டது.