கலெக்டர் அலுவலகத்தில் மனைவி மாயம்: கணவர் போலீசில் புகார்
சேலம் மாவட்டம், மேட்டூர் நகரை சேர்ந்தவர் சுலைமான் வயது-38, இவரது மனைவி ஆயிஷா. வயது-32, ஆயிஷா சேலத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.
ஆயிஷா வேலைக்காக தினமும் மேட்டூரிலிருந்து பஸ்சில் சேலம் வந்து சென்று கொண்டுள்ளார்.. தற்போது ஆயிஷா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இன்று அவருக்கு குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தனர்.
இந்நிலையில், தனது பேரு கால விடுப்புக்காக கூட்டுறவுத் துறையின் அதிகாரிகளிடம் விடுமுறை வாங்குவதற்காக ஆயிஷா நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் தனது கணவர் சுலைமானுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அதிகாரிகளை பார்க்க வந்துள்ளார்.
சுலைமான் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் உள்ள போர்ட்டிகோவில் நின்று கொண்டார். ஆயிஷா மட்டும் மேலே சென்று அதிகாரிகளிடம் விடுமுறை கடிதம் கொடுத்துவிட்டு வருவதற்காக கூறிவிட்டு மேலே படிகளில் ஏறி சென்றுள்ளார்.
மாலை 4-30 மணியாகியும் மேலே சென்ற ஆயிஷா திரும்பி வரவில்லை. நீண்ட நேரம் காணாமல் போனதால் தனது மனைவியின் செல்போனை தொடர்பு கொண்ட போது, அது “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுலைமான் மேலே சென்று ஆயிஷா சந்திக்க சென்ற கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடத்தில் விசாரித்துள்ளார். அதற்கு அவர்கள் ஆயிஷாவை நாங்கள் பார்க்கவில்லை என்று தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஐந்து அடுக்கு வளாகம் முழுவதும் தேடியும் ஆயிஷா கிடைக்கவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. ஆனாலும், ஆயிஷாவின் கணவர் சுலைமான் தொடர்ந்து இரவுவரை அந்த பகுதியிலேயே தேடிக்கொண்டு இருந்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரவு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வரும் போலீசார் சுலைமானின் பதட்டத்தை புரிந்து கொண்டு அவரை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் மேற்கண்ட விவரங்களை போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து இரவு 12 மணி வரை கலெக்டர் அலுவலக பகுதியிலேயே சுலைமானுடன், போலீசாரும் சேர்ந்து வளாகம் முழுவதும் தேடினார்கள்.
ஆனாலும் ஆயிஷாவை காணவில்லை. இதையடுத்து ஆயிஷாவை காணவில்லை என நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. பிறகு மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டு விடிய, விடிய ரோந்து சென்ற போலீசாரும் நிறைமாத கர்ப்பிணியான ஆயிஷாவை தேடினர்.
தொடர்ந்து அவரை பற்றியே மைக்கில் தகவல் கேட்டுக் கொண்டே இருந்தனர். இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண்ணால் எப்படி தனியாக மூன்று மாடிப்படிகளை ஏறமுடியும்....? கட்டாயம் கணவனும் உடன் சென்றிருக்க வேண்டும்.
குழந்தை பிறப்பதற்கு முதல் நாள்வரை அந்த பெண் எப்படி வேலைக்கு வரமுடியும்...? இப்படிப்பட்ட நிலையில், குடும்பத்தில் உள்ள பெண்கள் யாரும் உடன் வராமல் இருப்பார்களா...? இதுதவிர குடும்பத்தில் ஏதாவது பிரச்சனைகள் உள்ளதா என்று பார்க்க வேண்டும், எனவே இதுகுறித்து இன்று சுலைமானிடம் தனியாக விசாரணை நடத்தினால் தான் மேற்கொண்டு உண்மைகள் தெரியவரும் என்றனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் மாயமான சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.