சச்சினுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடியவில்லை: 60 வயதிலும் ஓய்வு பெறலாம்: ஷேவாக்
காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட இந்திய அதிரடி ஆட்டக்காரரும், டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டனுமான ஷேவாக் டெல்லியில் கூறியதாவது:
ஓய்வு காலம் முடிந்து விட்டது. காயத்தில் இருந்து முழுமையாக குணமாகி விட்டேன். ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக பயிற்சியை தொடங்குவேன்.
ஆசிய கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கர் 100 வது சர்வதேச சதத்தை அடித்து உலக சாதனை படைத்தார். வீரர்களின் ஓய்வு அறையில் அவருடன் அந்த மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.
டிராவிட் ஓய்வு பெற்றது பற்றி கேட்கிறீர்கள். விளையாட்டில் இருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை வீரர்களின் முடிவுக்கே விட்டு விட வேண்டும். விளையாட்டு வீரரை ஓய்வு பெறும்படி யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. இது 60 வயதில் ஓய்வு பெறுகிற அரசு வேலை கிடையாது. ஒரு கிரிக்கெட் வீரர் 30 வயதிலும் ஓய்வு பெறலாம் அல்லது 60 வயதிலும் ஓய்வு பெறலாம். இது வீரர்களின் முடிவை பொறுத்தது. இலங்கை வீரர் ஜெயசூர்யா 42 வயது வரை விளையாடியதை மறந்து விடக்கூடாது. நான் என்னால் முடிந்த வரை தொடர்ந்து, கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடி அணிக்கு எனது பங்களிப்பை அளிப்பேன்.
இவ்வாறு ஷேவாக் கூறினார்.