கலைஞர் பேசவிருக்கும் மேடையை அகற்றுமாறு அதிகாரிகள் கெடுபிடி! திமுக எம்பிக்கள் கொந்தளிப்பு
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து, 15.03.2012 அன்று அந்நகரில் திமுகவின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர் கலைஞர் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதற்காக நகரின் வடக்கு ரத வீதியில் மேல்புறத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டது. இதற்கான முன் அனுமதி தேர்தல் அதிகாரிகளிடம் 10 நாட்களுக்கு முன்பே பெறப்பட்டது. இதனிடையே மேடை அமைக்கப்பட்டு முழுமையாக அமைந்த நிலையில், இன்று (14.03.2012) அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதற்காக சங்கரன் கோவில் வரும் அவர், ரத வீதிகளின் வழியே சுற்றி கீழ ரத வீதியில் உள்ள அம்மன் சன்னதி முன்பு பேசவிருக்கிறார். அவர் வரும் வழியில் திமுக மேடை இருப்பதால், அதை அகற்ற வேண்டும் என்று அதிமுகவினர் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தேர்தல் அதிகாரி பரமசிவன், துணைத் தேர்தல் அதிகாரி தாமோதரன் அங்கே வந்தனர். ஜெ.வின் பிரச்சாரத்தை சுட்டிக்காட்டி மேடையை அகற்ற வேண்டும் என்றும், அவரது பிரச்சாரம் முடிந்த பின்பு அமைத்துக்கொள்ளுங்கள் என்றும் சொல்ல, திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விஷயத்தை அறிந்த திமுக எம்பிக்களான கே.பி.ராமலிங்கம், தங்கவேலு உட்பட கட்சியினர் மேடை பகுதிக்கு விரைந்தனர். அதிகாரிகள் அவர்களிடமும் மேடையை அகற்றம் பற்றி தெரிவிக்க, எம்பிக்கள் அவர்களோடு வாக்குவாதம் செய்தனர். ஏற்கனவே அனுமதி வாங்கப்பட்டு, அமைக்கப்பட்ட மேடை, அதனை அகற்ற முடியாது. வேண்டுமானால் நீங்கள் எழுத்துப்பூர்வமாக உத்தரவு தாருங்கள் என்று தேர்தல் அதிகாரிகளிடம் எம்பிக்கள் தெரிவிக்க, தேர்தல் அதிகாரிகளோ அதற்கு மவுனம் சாதித்தனர்.
இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குவாதமும், பரபரப்பு சூழ்நிலையும் அதிகாலை 3 மணி வரை நீடித்தது. அதன்பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பினர். தற்போது மேடைக்கு காவலாக எம்பிக்களும், கட்சியினரும் அங்கே முகாமிட்டுள்ளனர். இச்சம்பவம் சங்கரன்கோவில் நகரில் பரபரப்பையும் பதட்டதையும் ஏற்படுத்தியுள்ளது.
படங்கள்: ராம்குமார்