பெண் ஆத்திரம் : கள்ளக்காதலனுக்கு மயக்க ஊசி போட்டு எரித்துக்கொன்றார்
காளஹஸ்தி அடுத்த தொத்தம்பேடு மண்டலம் கஞ்சனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ரத்தினம் (35). இவருக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக மனைவியை பிரிந்த இவர் தனியாக வசித்து வந்தார்.
அதே ஊரை சேர்ந்தவர் சுஜாதா (32). இவருக்கும் திருப்பதியை சேர்ந்த கிருஷ்ணய்யா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக கணவன், மனைவி விவாகரத்து பெற்றனர்.
தனியாக வசித்து வந்த வெங்கட்ரத்தினத்துக்கும், சுஜாதாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் கணவன், மனைவி போல் தனிகுடித்தனம் நடத்தினர்.இந்நிலையில் வெங்கட்ரத்தினம் காளஹஸ்தி மஞ்சிநிலுகுண்டா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 3 மாதமாக சுஜாதாவுடன் தங்கி வேலை செய்து வந்தார். அப்போது சுஜாதா நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வெங்கட்ரத்தினம் அவரை அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தி வந்தாராம்.நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து குடிபோதையில் வெங்கட்ரத்தினம் வீட்டுக்கு வந்தார். அப்போது சுஜாதாவுடன் மீண்டும் தகராறு செய்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த சுஜாதா, வெங்கட்ரத்தினத்துக்கு மேலும் மதுபானம் ஊற்றி கொடுத்து, மயக்க ஊசி போட்டாராம். இதில் மயக்கமடைந்த வெங்கட்ரத்தினத்தை வீட்டுக்கு பின்புறம் இழுத்து சென்ற சுஜாதா அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தவர்களையும், அருகில் செல்ல விடாமல் சுஜாதா தடுத்தாராம்.தீயில் கருகி வெங்கட்ரத்தினம் இறந்ததை உறுதி செய்த சுஜாதா, உடனடியாக காளஹஸ்தி டவுன் போலீசில் சரணடைந்தார்.அவரிடம் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் விசாரணை நடத்தினார். அப்போது வெங்கட்ரத்தினத்தின் கொடுமை தாங்க முடியாமல் அவரை மது குடிக்க வைத்து, மயக்க ஊசி போட்டு, மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ததாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சுஜாதாவை கைது செய்த போலீசார் காளஹஸ்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.