ஐஐடி நுழைவுத் தேர்வுகளை தமிழில் நடத்தக்கோரி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ளள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
மத்திய கல்வி நிறுவனங்களின் இளநிலை படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டு மே நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பயனடையும் வகையில் இத்தேர்வுகளை தமிழ்மொழியிலும் நடத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.), தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (என்.ஐ.டி.), இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.ஐ.டி.), மருத்துவ கல்லூரிகளில் உள்ள அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய வேளாண் கல்வி நிறுவனங்கள் போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் உள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களை நிரப்ப அடுத்த மாதம் தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இந்த நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில்தான் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 6 இலட்சம் முதல் 7 இலட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுகின்றனர். இவர்களில் 75 விழுக்காட்டினர், அதாவது சுமார் 5 இலட்சம் பேர் தமிழ் வழியில் படித்தவர்கள் ஆவர். இவர்களுக்கு பாடத் திறமை இருந்தும், நுழைவுத் தேர்வு ஆங்கிலத்திலும், இந்தியிலும் நடத்தப்படுவதால், மத்திய கல்வி நிறுவனங்களில் நுழைய முடிவதில்லை.
மத்திய, மாநில கல்வி நிறுவனங்கள் எதற்குமே நுழைவுத் தேர்வு நடத்தப்படக்கூடாது என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் போது, அவற்றை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும். இந்த நுழைவுத் தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் பொதுவானவை என்பதால் அதில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை. வினாத்தாள்களில் மட்டும் கூடுதலாக தமிழிலும் வினாக்களை சேர்த்துவிட்டாலே இப்பிரச்சனை தீர்ந்துவிடும்.
மத்திய கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வை ஆங்கிலம், இந்தி ஆகியவற்றுடன் தமிழிலும் நடத்துவதில் எந்த சிரமமும் இல்லை. தொடர்வண்டித்துறை பணிகளுக்கான போட்டி தேர்வுகள் இந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் ஒன்று என மொத்தம் 4 மொழிகளில் நடத்தப்படுகின்றன. மத்திய பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளும் 3 மொழிகளில் நடத்தப்படுகின்றன. இதேபோல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மத்திய கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை தமிழ் மொழியிலும், இந்திய அரசியல் சட்டத்தின் 8வது அட்டவனையில் இணைக்கப்பட்டுள்ள பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரி தமிழக மாணவர் சங்கத்தின் சார்பில் வரும் 8 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நினைவரங்கம் அருகில் தொடர்முழக்க போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் நானும், தமிழக மாணவர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் தலைவர்களும் கலந்துகொள்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.