அக்கா தங்கையை காரில் அழைத்துச் சென்று நகை கொள்ளை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர், அமலாமேரி (வயது 35). இவர் தனது தங்கையுடன் நேற்று காலை சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, பஸ்சில் தாம்பரம் வந்தார். பின்னர் கிழக்கு தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரி எதிரில் உள்ள பஸ் நிறுத்ததத்தில், மடிப்பாக்கம் செல்வதற்காக தங்கையுடன் காத்திருந்தார்.
அப்போது வெள்ளை நிற காரில் வந்த 2 பேர், எங்கு செல்ல வேண்டும்? என அமலா மேரியை கேட்டுள்ளனர். மடிப்பாக்கம் செல்ல வேண்டும் என கூறியதும், "கார் மடிப்பாக்கம்தான் செல்கிறது, ஏறி கொள்ளுங்கள். பஸ் கட்டணம் கொடுத்தால் போதும்'' என கூறி, இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டனர்.
கார், கவுரிவாக்கத்தைக் கடந்து சந்தோஷபுரம் தைலக்காடு பகுதியில் சென்ற போது காரில் முன்பகுதியில் இருந்த கொள்ளையன், அமலா மேரி மற்றும் அவரது தங்கையை கத்தியை காட்டி மிரட்டி 5சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டான். பின்னர் இரு பெண்களையும் மிரட்டி காரை விட்டு இறக்கிவிட்டுவிட்டு அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்த அமலாமேரி பின்னர் சேலையூர் போலீசில் புகார் செய்தார்.