சென்னை விமானி 3 ஆண்டுகள் பணி நீக்கம்
கடந்த மாதம் (பிப்ரவரி) 3 ந்தேதி, சென்னை மதுரை செல்லும் ஏர் இந்தியா விமானம் சென்னையில் இருந்து புறப்படத் தயாராக இருந்தது. அதற்கு முன்பாக அந்த விமானத்தை ஓட்ட இருந்த மூத்த விமானி ஜோசப் மது அருந்தி இருக்கிறாரா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில், விமானி ஜோசப் மது அருந்தி இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து ஏர் இந்தியா' நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மது அருந்திவிட்டு விமானம் ஓட்டும் விமானிகள் குறித்து அடிக்கடி புகார் வந்ததால், அது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி அஜீத்சிங் உத்தரவிட்டு இருக்கிறார். இந்த நிலையில், விமானி ஜோசப் மீதான நடவடிக்கை அறிக்கையை பரிசீலித்த ஏர் இந்தியா' நிறுவனம், அவரை 3 ஆண்டுகள் பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
மூத்த விமானியான ஜோசப், ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை பொது மேலாளர் (செயல்பாடு) ஆகவும், பயிற்சி கேப்டன் ஆகவும் பொறுப்பு வகித்து வந்தார். அத்துடன் விமான போக்குவரத்து கட்டுப்பாடு இயக்குனரகத்தில் ஆய்வாளர் பொறுப்பிலும் ஜோசப் இருந்தார். இந்த பதவியின் மூலம் இந்தியாவில் உள்ள எந்த ஒரு விமானத்திலும், விமானிகளிடமும் சோதனை நடத்தும் அதிகாரமும் இருந்து வந்தது.
தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் மூலம், மேற்கண்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் விமானி ஜோசப் 3 ஆண்டுகளுக்கு விடுவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் வகித்து வந்த பயிற்சி கேப்டன் அந்தஸ்தும் பறிக்கப்பட்டுவிட்டது.