கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: வடமாநில இளைஞர்கள் கைது:
5 துப்பாக்கிகள் 43 தோட்டாக்கள் பறிமுதல்
சென்னையில் ரூ 1 கோடி கேட்டு கடத்தப்பட்ட 10 ம் வகுப்பு மாணவனை போலீசார் பத்திரமாக மீட்டனர். எம்கேபி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மகன் யுவராஜாவை மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்று ரூ 1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தனர்.
இதுதொடர்பாக எம்கேபி நகர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கடத்தல்காரர்கள் பெரவள்ளூரில் ஒரு வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. அந்த வீட்டை சுற்றிவளைத்த போலீசார் மாணவன் யுவராஜாவை பத்திரமாக மீட்டனர்.
கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட மாணவனின் தாய் ஜானகி, தந்தை கிருஷ்ணன் ஆகியோர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அழைத்து வரப்பட்டனர். மாணவன் யுவராஜை இணை கமிஷனர் சங்கர் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 26 ந் தேதி அன்று மாணவன் யுவராஜ் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறியுள்ளான். பின்னர் அவன் வீடு திரும்பவில்லை. அது தொடர்பாக எம்.கே.பி.நகர் போலீசார் மாணவன் மாயமானதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று இரவு மாணவன் தந்தை கிருஷ்ணனுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் மாணவரை விடுவிக்க ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தார். உடனடியாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மாணவரின் நண்பர்கள் பற்றி விசாரித்தோம். அப்போது கொடுங்கையூரில் வசித்து வரும் மாணவர் விஜயகுமாரும், யுவராஜும் நெருங்கிய நண்பர்கள் என தெரியவந்தது.
அவரிடம் முதலில் விசாரணை நடத்தி 6 மணி நேரத்துக்குள் பத்திரமாக மாணவனை மீட்டு விட்டோம். கடத்தல் தொடர்பாக விஜயகுமார் அவரது நண்பர்கள் வசந்த் (பிளஸ் 1 மாணவர்), அன்வர்கான், அஸ்லம்கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அஸ்லம்கானும், அன்வர்கானும் உ.பி.யைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் அவர்களது வீட்டில் இருந்து 5 துப்பாக்கிகள் 43 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இந்த துப்பாக்கிகள், தோட்டாக்களை உ.பி.யில் சிறையில் இருக்கும் இவர்களது தந்தை அகமதுகான் இங்கு விட்டுச் சென்றது தெரிய வந்தது.
அவரது பின்னணி குறித்து உ.பி. போலீசார் மூலம் விசாரிக்க உள்ளோம். சென்னையில் தொடர்ந்து வடமாநிலத்தவர்கள் குற்றச் செயலில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அவர்கள் பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவனின் தாய் ஜானகி கூறியதாவது: எனது மகன் யுவராஜ் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களை பார்க்க சென்று விடுவான். அப்போது செலவுக்கு ரூ.100க்கு குறையாமல் பணம் கொடுப்பேன்.
கடந்த ஞாயிறு காலையிலும் ரூ.100 வாங்கிச் சென்றான். மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் அவனுக்கு ஆர்வம் அதிகம். புதிதாக மோட்டார் சைக்கிள் கேட்டு இருந்தான். இன்னும் பெரியவன் ஆனதும் வாங்கித் தருவதாக சொன்னோம்.
அவனைத் தேடி அடிக்கடி நிறைய நண்பர்கள் வீட்டுக்கு வருவார்கள். கடத்தப்பட்ட அன்று அனைவரிடமும் போன் செய்து விசாரித்தோம். தெரியாது என்று சொல்லி விட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு எனது கணவருக்கு மிரட்டல் போன் வந்தது. போலீசுக்கு தெரியாமல் ரூ.1 கோடியுடன் வரவேண்டும் இல்லையெனில் யுவராஜை வெட்டிக் கொன்று, வீட்டு வாசலில் போட்டு விடுவோம் என்று மிரட்டினார்கள். யுவராஜும், அவர்களிடம் போனை வாங்கி கதறி அழுதான்.
ஆனால் போலீசார் நல்லபடியாக எனது மகனை மீட்டு கொடுத்து விட்டனர். அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தந்தை கிருஷ்ணன் கூறியதாவது: என் மகன் யுவராஜ் சமீபத்தில் நடந்த தேர்வில் சில பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்து இருந்தான். இதனால் அவன் எங்களுக்கு பயந்து உறவினர்கள் வீட்டுக்கு சென்று இருப்பான் என்று நினைத்தேன்.
2 நாட்களாக உறவினர்களுக்கு போன் செய்தும், நேரில் சென்றும் விசாரித்தேன். கடைசியில் நேற்று இரவு போலீசில் புகார் செய்தேன். இதற்கிடையே ரூ.1 கோடி கேட்டு எனக்கு போனில் மிரட்டல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் போலீசார் துரிதமாக செயல்பட்டு மகனை பத்திரமாக மீட்டு விட்டனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்காக கமிஷனருக்கும், போலீசாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.