போலீஸ் துப்பாக்கிச் சூடு! 5 கொள்ளையர்கள் பலி! 2 போலீசார் காயம்! சென்னையில் நள்ளிரவில் பரபரப்பு!
சென்னை பெருங்குடி ஜன.23 ம் தேதி பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் பிப்.20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதை அடுத்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். மேலும், பல்வேறு வங்கிக் கிளைகளில் எடுக்கப்பட்ட வீடியோ படங்களை வைத்து, வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை வெளியிட்டு, நேற்று புதன்கிழமை சென்னை காவல் ஆணையர் திரிபாதி செய்தியாளர்களிடம் பேசினார். கொள்ளையர்கள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் மீடியாக்கள், பொதுமக்கள் இந்த விவகாரத்தில் உதவும்படியும் கோரியிருந்தார்.
இந்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதாக, சென்னை மாநகர காவல்துறைக்கு நேற்று (22.02.2012) இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேளச்சேரி நேதாஜி சாலையில் ஏ1 முதலி தெருவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வீடு தரைதளம் மற்றும் இரண்டு அடுக்கு மாடி வீடாக உள்ளது. இதில் தரைதளப் பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கி இருந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அந்த வீட்டை சுற்றி வலைத்தனர். அப்போது போலீசார் கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். உங்களைப் பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்தது. முதலில் நீங்கள் வெளியே வாருங்கள் என்று எச்சரிக்கை கொடுத்தனர். ஆனால் அதனை கொள்ளையர்கள் ஏற்கவில்லை.
இதையடுத்து போலீசார் சரண் அடையும்படி எச்சரிக்கை விடுத்தனர். அதையும் அவர்கள் ஏற்கவில்லை. பின்னர் போலீசார் உள்ளே நுழைய முயன்றனர். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் ஜன்னல்களை இழுத்து மூடிவிட்டனர். போலீசார் அந்த ஜன்னலை துப்பாக்கியால் இடிக்க முயற்சிக்கின்றனர். அப்போது உள்ளே இருந்த கொள்ளையர்கள் வெளியே இருந்த போலீசாரை நோக்கி திடீரென சுட ஆரம்பித்தனர்.
இதில் இரண்டு போலீசார் மீது குண்டு காயம் பட்டது. இதனால் அவர்கள் கீழே விழுந்தனர். உடனே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
நீங்கள் உள்ளே வந்தால் அருகில் உள்ள பொதுமக்களை துப்பாக்கியால் சுடுவோம் என்று கொள்ளையர்கள் எச்சரித்தனர்.
இதனால் போலீசார் வேறுவழியின்றி கொள்ளையர்கள் மீது துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு போலீசார் முன்னேறினர். ஒரு கட்டத்தில் வீட்டை திறந்து பார்க்கும்போது, அங்கு 5 பேர் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
உடனே அவர்களை வாகனத்தில் ஏற்றி, அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார். அவர்களை சோதித்த மருத்துவர்கள், 5 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 5 பேரும் கொள்ளையர்கள். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் என்று தெரியவந்தது.
இதற்கிடையே கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட்து.
இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்ததால் பொதுமக்கள் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. விடிய விடிய இந்த செய்தி தீ போல் பரவி அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.