இளைஞர் எழுச்சி நாள் என்ற பெயரில் உதவுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தி.மு.க. பொருளாளரும், இளைஞர் அணிச்செயலாளருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’பெரிய அளவிலான மின் தட்டுப்பாடு, பால் விலை ஏற்றம், பஸ் கட்டண உயர்வு, பல வகையான வரிகள் உயர்வு எனப் பல்வேறு துன்பங்களால் தமிழக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்தவிதமான முன்னேற்றத் திட்டங்களும் இல்லை. ஆனால் தலைவர் கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த அத்தனை நலத்திட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல, கழக முன்னோடிகள் மற்றும் கழகத் தோழர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு, சிறையில் தள்ளி வரும் கொடுமைகளை நடத்துவதைத்தான் கண்டு வருகிறோம். எனவே இந்தச் சூழ்நிலையில் எனது பிறந்த நாளைக் கொண்டாடத் தேவையில்லை என்பதே எனது கண்டிப்பான வேண்டுகோள்.
என் மீது உண்மையான அன்பு கொண்டுள்ள கழக நண்பர்கள் எளிய வகையில் நலிந்த ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை இளைஞர் எழுச்சி நாள் என்ற பெயரில் வழங்கிட பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.