அமிதாப்பச்சனுக்கு மேலும் ஒரு ஆபரேஷன்
வயிற்று வலியால் அவதிப்பட்டு வரும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு மேலும் ஒரு ஆபரேஷன் மும்பை ஆஸ்பத்திரியில் நடைபெற உள்ளது.
69 வயதாகும் இந்தி படவுலக மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் நீண்ட காலமாக வயிற்று வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக இரண்டு சந்தர்ப்பங்களில் அவருக்கு அடிவயிற்றில் ஆபரேஷன்கள் நடைபெற்றன.
இருந்தாலும் பிரச்சினை தீராததால் கடந்த 11-ந் தேதி அன்று மும்பையில் உள்ள செவன்ஹில்ஸ் ஆஸ்பத்திரியில் அமிதாப்பச்சனுக்கு டாக்டர்கள் மீண்டும் ஆபரேஷன் செய்தனர். அடிவயிற்றுப் பகுதியில் 5 மணி நேரம் வரை நீடித்த இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் அமிதாப்பச்சன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டதாக கடந்த செவ்வாய்க்கிழமையே தகவல்கள் வெளியானது.
>ஆனால் அமிதாப்பச்சன் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. மாறாக அவர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து மருத்துவக் கண் காணிப்பில் இருந்து வருகிறார். ஆபரேஷன் முடிந்ததும் வலைத்தளத்தில் அவர் தன்னுடைய ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், வலி அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்தநிலையில் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்காக அமிதாப்புக்கு மேலும் ஒரு ஆபரேஷன் நடக்க உள்ளது. இந்த தகவலை ஒரு சமூக வலைத்தளத்தில் அவரே வெளியிட்டு உள்ளார். எனினும் ஆபரேஷன் பற்றிய விரிவான தகவல்கள் எதையும் அவர் இந்த முறையும் தெரிவிக்கவில்லை.
``மேலும் சில மருத்துவ பரிசோதனைகள்... சில சிகிச்சைகள், ஆபரேஷன் தியேட்டருக்கு மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டிய நிலைமை.. இதற்காக நீண்ட நாள் தங்க வேண்டி இருக்கும் போலிருக்கிறது. இதற்கெல்லாம் எவ்வளவு நாள் பிடிக்கும் என்று தெரியவில்லை. உங்களுடைய பிரார்த்தனைக்கும், அன்புக்கும் நன்றி...'' என அவர் தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவர் ஆஸ்பத்திரியில் நீண்ட நாட்கள் தங்கி இருப்பார் என்று தெரிகிறது.
1982-ம் ஆண்டு கூலி படத்தின் சண்டைக் காட்சியில் நடித்த போது அமிதாப்பச்சனுக்கு குடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதுமுதல் அவர் வயிறு தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்.