கிரிக்கெட் தகராறில் மோதல்: 20 மாணவர்கள் மீது வழக்கு வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரத்தில் ஒரே வளாகத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை பாலிடெக்னிக் மாணவர்கள் ஒரு பிரிவாகவும், ஐ.டி.ஐ மாணவர்கள் ஒரு பிரிவாகவும் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது இருதரப் பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஆதரவாக வெளி ஆட்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி வளாகத்தில் புகுந்து தகராறு செய்தனர். அங்கிருந்த கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். மேலும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களை சரமாரியாக தாக்கினர். மாணவர்களும் வெளி ஆட்களும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த மயில்வாகனன் என்ற மாணவன் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர்கள் நிலவழகன், பழனி மற்றும் போலீசார் கல்லூரிக்கு விரைந்து சென்றனர். அங்கு தகராறில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மயில் வாகனன், பாலிடெக்னிக் மாணவர் பிரபாகரன் ஆகியோர் தனிதனியே புகார் அளித்தனர். இது தொடர்பாக வாணியம்பாடி தாலுகா போலீசார் இரு கல்லூரிகளை சேர்ந்த 20 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.